3 விஞ்ஞானிகளுக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. உலோக கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக இந்த விருது கூட்டாக வழங்கப்பட உள்ளது.
ஜப்பானின் கியோடோ நகரைச் சேர்ந்த சுசுமு கிடகாவா, பிரிட்டனின் க்ளஸ்பர்ன் நகரைச் சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், ஜோர்டானின் அம்மான் நகரைச் சேர்ந்த ஒமர் எம் யாகி ஆகிய மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டளது.
இதைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எம். மார்டினிஸ், பிரிட்டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்கேல் டெவோரெட் ஆகியோர் இயற்பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு நாளையும், அமைதிக்கான நோபல் பரிசு அக்.10-ம் தேதியும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.13-ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.