No menu items!

சர்க்கரை நோயை அரை மணிநேரத்தில் குணமாக்கலாம் – சீனாவின் வியத்தகு சாதனை!

சர்க்கரை நோயை அரை மணிநேரத்தில் குணமாக்கலாம் – சீனாவின் வியத்தகு சாதனை!

சர்க்கரை நோயை அரை மணிநேரத்தில் குணப்படுத்தும் சிகிச்சை முறையை சீனா டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடும் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, மாத்திரை எடுத்து கொள்ளும் சூழலில் இந்த அரை மணிநேர சிகிச்சை முறையில் முழுவதுமாக அந்த நோய் குணமாகிவிடும் என கூறப்படுவதால் பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

இது சாத்தியமா?

இது தொடர்பாக, பொது நல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா தரும் விளக்கம் இங்கே…

“சாத்தியம்தான் என்பதை சமீபத்தில் சீன மருத்துவ அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். முற்றிலும் இன்சுலின் சுரப்பு இல்லாத நிலையில் டைப் ஒன் நீரிழிவு நிலையில் இருந்த 25 வயது பெண்மணி ஒருவருக்கு சிகிச்சை அளித்து அவரது நீரிழிவைக் குணப்படுத்தி உள்ளனர். குணம் என்றால் இன்சுலின் ஊசி தேவைப்படாத நிலையில் அவரது உடலில் சுயமாக இன்சுலின் உற்பத்தி மீண்டும் ஏற்படுமாறு செய்துள்ளனர். நிச்சயம் இது வியத்தகு சாதனை தான்.

இதை அவர்கள் எப்படி செய்தனர்?

அந்தப் பெண்ணின் கொழுப்புத் திசுக்களில் இருந்து செல்களை எடுத்தனர். அத்தகைய செல்களில் உள்ள மரபணுக்களில் உயிர் வேதியியல் ரசாயனங்கள் மூலம் உரிய மாற்றங்களைச் செய்து மறு-ஆக்கத்துக்கு உட்படுத்தி அதை எதுவாகவும் உருமாறும் செல்களாக ( Pluripotent stem cells) மாற்றினர். பிறகு அந்த ப்ளூரி பொட்டண்ட் ஸ்டெம் செல்களை – இன்சுலின் சுரக்கும் இயற்கையான பீட்டா செல்களாக உருமாற்றினர்.இவற்றுக்கு “ரசாயனம் மூலம் தூண்டப்பட்ட ப்ளூரி பொட்டன்ட் ஸ்டெம் செல்களில் இருந்து தோன்றிய ஐலெட் செல்கள்” என்று பெயரிட்டனர்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட ஐலெட் செல்களை அந்தப் பெண்மணியின் முன் வயிற்றுப் பகுதியில் உள்ள தசையில் ஊசி மூலம் செலுத்தினர். இவ்வாறு ஊசி மூலம் செலுத்தியதற்கு அரை மணிநேரம் மட்டுமே எடுத்துக் கொண்டது என்பதால் அனைத்து ஊடகங்களும் அரை மணிநேரத்தில் டைப் ஒன் நீரிழிவை குணப்படுத்தியதாக பரைசாற்றினர்.

இதற்கு முன்பு இந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சியில், கணையத்தின் பீட்டா செல்களை கல்லீரலின் ரத்த நாளத்தில் சூழ்வைப்பதே முறையாக இருந்தது. எனினும் அந்த முறையில், உடலின் எதிர்ப்பு சக்தி தீவிரமாக இந்த புதிய செல்களை எதிர்த்து அழிப்பது நடந்தது.

இந்தப் புதிய முறையான முன் வயிற்றுப் பகுதி தசையில் ஊசி மூலம் எளிதாக செலுத்தும் முயற்சி சிறப்பானதாகும். மேலும், நோயரிடமிருந்தே எடுக்கப்பட்ட திசுக்களை அவருக்கே செலுத்தும் போது எதிர்ப்பு சக்தியால் புதிய செல்கள் வீழ்த்தப்படும் சதவிகிதம் மிக மிகக் குறைவு.

இது ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை என்பதால் நோயருக்கு எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் மருந்துகள் வழங்கப்பட்டதும் தெரிகிறது. இத்தகையதோர் புதிய முயற்சியை செய்த 75 நாட்களுக்குப் பிறகு அந்த நோயாளிக்கு இன்சுலின் ஊசி தேவை இல்லாமே ரத்த க்ளூகோஸ் அளவுகள் நீரிழிவு இல்லாதவருக்கு இருக்கும் நிலைக்கு வந்தது தெரிகிறது.

ஒரு வருடமாக அந்த நோயாளியை கண்காணிப்புக்கு உட்படுத்தியதில் இந்த புதிய சிகிச்சையால் வேறு பாதிப்புகள் தோன்றாமல் இருப்பதும் தெரிகிறது. டைப் ஒன்று நீரிழிவிற்கு உயிர் காக்கும் ஒரே மருந்தான “இன்சுலின்” கண்டறியப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்திருக்கும் சூழ்நிலையில் நோயாளியிடம் இருந்தே எடுக்கப்பட்ட செல்களை – தொழில்நுட்பம் மூலம் ஸ்டெம் செல்களாக மாற்றி அந்த ஸ்டெம் செல்களை – இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்களாக மாற்றி நோயாளிக்கு ஊசி மூலம் எளிதாக செலுத்தி டைப் ஒன்று நீரிழிவில் இருந்து குணத்தை அளித்துள்ள டியாஜின் முதல் மத்திய மருத்துவமனை மற்றும் பெக்கிங் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள்.

இந்த மருத்துவ சிகிச்சை முறையில் இன்னும் பலரைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு நீண்ட கால சாதக பாதக அம்சங்கள் ஆராயப்பட்டு இந்த சிகிச்சை விரைவில் உலகத்தார் அனைவருக்கும் கைகொள்ளத்தக்க விலையில் கிடைக்கும் சிகிச்சையாக மாறும் போது நம்மால் டைப் ஒன்று நீரிழிவு நோயர்கள் அனைவருக்கும் இன்சுலின் ஊசியிலிருந்து விடுதலை அளிக்க முடியும். அந்த நாள் விரைவில் வர இருக்கிறது.

அதுவரை, டைப் ஒன்று நீரிழிவிற்கு இன்சுலின் எனும் அருமருந்தே உயிர்காக்கும் ஒரே மருந்தாகத் தொடரும்” என்கிறார், டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...