கிளஸ்டர் குண்டுகளை ஈரான் முதல் முறையாக பயன்படுத்துவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இது பல குண்டுகளாக சிதறி வெடிக்கும் வகையை சேர்ந்தது என்பதால் பாதிப்பு அதிகளவில் ஏற்படும் என்பது கவனிக்கத்தக்கது.
அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு நாடுகள் இடையிலான போர் இன்று 9-வது நாளாக நீடித்தது. இந்த தாக்குதல்களால் இருதரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் ராணுவ உயர் அதிகாரிகள், மூத்த அணு விஞ்ஞானிகள் உட்பட 224 பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலில் 25 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இஸ்ரேலின் மத்திய பகுதிகளில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை குறிவைத்து ஈரான் கடந்த 19-ம் தேதி ‘கிளஸ்டர்’ எனப்படும் கொத்து குண்டுகளை வீசியதாக, அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் தெரிவித்தது. சுமார் 8 கி.மீ. சுற்றளவு வரை கடும் சேதத்தை ஏற்படுத்தக்கூடிய கொத்து குண்டுகளை இஸ்ரேல் மீது ஈரான் பயன்படுத்துவது இதுவே முதல் முறை.
ஈரான் வீசிய கொத்து குண்டுகளால், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் உட்பட பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட கட்டிடங்கள் சரிந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் துறைமுக நகரமான ஹைபா மற்றும் டான் மாவட்டங்கள் உட்பட பல பகுதிகள் மீது ஈரான் நேற்று சரமாரியாக ஏவுகணைகளை வீசியது.
சைரன் ஒலி எழுப்பியதும் மக்கள் பதுங்கு குழிகளிலும், வணிக வளாகங்களின் கார் பார்க்கிங் பகுதிகளிலும் சென்று பதுங்கினர். ஈரான் வீசிய ஏவுகணைகள் பல கட்டிடங்கள் மீது விழுந்து வெடித்தன. பீர் சேவா நகரில் உள்ள மைக்ரோசாஃப்ட் அலுவலக கட்டிடம் மீது ஈரான் ஏவுகணை விழுந்து வெடித்ததில் பலர் காயம் அடைந்தனர்.
கிளஸ்டர் குண்டுகளின் வீரியம் என்ன? – கிளஸ்டர் குண்டு என்பது மற்ற ஏவுகணைபோல ஒரே முறையில் வெடிப்பது அல்ல. இலக்கை நெருங்கியதும், தரையில் இருந்து 7 கி.மீ. உயரத்தில் வெடிக்கும். அப்போது அதில் இருந்து வெளியேறும் ஏராளமான சிறு சிறு குண்டுகள் 8 கி.மீ. சுற்றளவுக்கு சிதறி விழுந்து, ஒவ்வொன்றும் தனித்தனியாக வெடிக்கும். குடியிருப்பு பகுதிகளில் இந்த குண்டு விழும்போது, அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.