நாட்டில் உள்ள க்ரீன் பார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில், அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விமான நிலையங்களில், இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு உள்படுத்தி, இந்தியர்கள் உள்பட க்ரீன் கார்டு வைத்திருக்கும் முதியவர்களை குறி வைத்து குடியுரிமைத் துறை அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுத்து, தாங்களாக முன்வந்து க்ரீன் கார்டுகளை ஒப்படைக்குமாறு கட்டாயப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
சிலர், அவர்களின் கெடுபிடிகளுக்குப் பயந்து தங்களது க்ரீன் கார்டுகளை ஒப்படைத்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்தக் குடிமக்களுக்கு சட்டத் துறையிடமிருந்து வரும் அறிவுரை என்னவென்றால் யாரும் க்ரீன் கார்டை ஒப்படைக்கத் தேவையில்லை. க்ரீன் கார்டு வைத்திருப்பவர்கள், குடியுரிமைத் துறை நீதிபதியின் ஆலோசனையை பெறலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
க்ரீன் கார்டுகளை ஒப்படைக்க அழுத்தம் கொடுக்கப்பட்ட மூத்தக் குடிமக்களுக்காக பணியாற்றும் குடியுரிமைத் துறை வழக்குரைஞர்கள் கூறுகையில், அமெரிக்காவில் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருக்கும் பெற்றோர், அமெரிக்காவின் குளிர்காலத்தில் மட்டும் அதாவது 180 நாள்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று விடுவது வழக்கம். குளிர்காலம் முடிந்து அமெரிக்கா திரும்பும் போது நிச்சயம் அவர்களது க்ரீடு கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படத்தான் வேண்டும். இதனைக் காரணம் காட்டி நிராகரிக்க முடியாது. ஏனெனில், அமெரிக்க சட்டம், ஒருவர் 365 நாள்ளுக்கும் மேலாக அமெரிக்காவிலிருந்து வெளியே சென்று எங்காவது தங்கியிருந்தால்தான் க்ரீன் கார்டு உரிமத்தை ரத்து செய்வதற்காக பரிசீலிக்க முடியும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள்.
மேலும், க்ரீன் கார்டு வைத்திருக்கும் இந்திய மூத்த குடிமக்களுக்காக பணியாற்றி வரும் வழக்குரைஞர் ஒருவர் கூறுகையில், குறிப்பிட்ட கால இடைவெளியில் அமெரிக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவில் தங்கியிருக்கும் மூத்த குடிமக்கள், தங்களது க்ரீன் கார்டுகளை ஒப்படைக்குமாறு மிரட்டப்படுவதாகவும், இல்லாவிட்டால் திடீர் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என அச்சுறுத்தல்கள் வருவதாகவும் மூத்த குடிமக்கள் புகார் தெரிவித்திருப்பதாகக் கூறுகிறார்.