2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கிறார்.
தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன. தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளது.
கலைமாமணி விருது வழங்கக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்கள் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் இதர கலைப் பிரிவுகள் என கலைப் பிரிவு வாரியாக பிரிக்கப்பட்டு, கலைமாமணிவிருது பெறத் தகுதியுள்ள கலைஞர்களைத் தேர்வு செய்திட கலைப் பிரிவு வாரியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.
மேற்படி வல்லுநர் குழுக்களால் அளிக்கப்பட்ட தகுதியுள்ள கலைஞர்களின் பெயர்ப் பட்டியல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் பரிந்துரையை ஏற்று 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர் பட்டியலை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டு அரசாணையில் அறிவித்துள்ளது.
கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.
மேலும், பாரதியார். எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோர் பெயரில் வழங்கப்படும் கலை வித்தகர்களுக்கான அகில இந்திய விருதுகளும் கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விருது
பாரதியார் விருது (இயல்) – முனைவர் ந. முருகேச பாண்டியன்எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) – பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ்
பாலசரசுவதி விருது (நாட்டியம்) – பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்
அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற் கேடயம்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்படும் சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கான சுழற் கேடயம் பெறுவதற்குரிய கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழு கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கலை நிறுவனம் – தமிழ் இசைச் சங்கம், சென்னை (ராஜா அண்ணாமலை மன்றம்)
சிறந்த நாடகக் குழு – கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம்.
சிறந்த கலை நிறுவனத்திற்கு வழங்கப்படும் கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கு வழங்கப்படும் சுழற் கேடயத்துடன் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும்.