76 மீட்டர் அகலம் கொண்ட விண்கல் ஒன்று இன்று பூமியை நெருக்கமாக கடந்து செல்ல இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
2025 JR என பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல் மணிக்கு 40,800 கி.மீ வேகத்தில் நமது பூமியை கடந்து செல்ல இருக்கிறது. இது பூமியிலிருந்து 4.6 மில்லியன் கி.மீ தொலைவில்தான் செல்கிறது. இருப்பினும் இதன் பாதையில சிறிய மாற்றம் ஏற்பட்டால் கூட அது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
நம் பிரபஞ்சம் முழுவதும் விண்கற்கள் இருக்கின்றன. செவ்வாய் கோளுக்கு கொஞ்சம் தள்ளி மிகப்பெரிய விண்கல் பெல்ட் இருக்கிறது. லட்சக்கணக்கான விண்கற்கள் இங்கு சுற்றிக்கொண்டிருக்கின்றன. இதை தவிர, புளூட்டோவுக்கு கொஞ்சம் தள்ளி இன்னொரு விண்கல் பெல்ட் இருக்கிறது. அங்கும் கோடிக்கணக்கான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றிலிருந்து சில எப்போதாவது சூரியனின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்டு வரும்.
அப்படி வரும் விண்கற்கள் ஏதாவது ஒரு கிரகத்தின் மீது மோத வாய்ப்பு இருக்கிறது. பூமி மீதும்தான், எனவேதான் விண்கற்கள் குறித்து விஞ்ஞானிகள் மிகுந்த அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த விண்கற்கள் எப்போது எப்படி பூமியை தாக்கும் என்பதை கணிக்கவே முடியாது. இந்த 2025 JR விண்கல் பூமியை தாக்கினால் பேரழிவு ஏற்படும்.
ஹிரோஷிமாவில் விழுந்த அணு குண்டை விட 200-300 மடங்கு அதிக சக்தி வெளியாகும். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 20 கி.மீ சுற்றளவுக்கு எந்த கட்டிடமும் மிச்சம் இருக்காது. கடலில் விழுந்தால் மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்படும். கடந்த 2013ம் ஆண்டு ரஷ்யாவில் 20 மீ விண்கல் விழுந்தது. இதில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றாலும் 1500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். ஆனால் 2025 JR விண்கல் விழுந்தால் உயிரிழப்புகள் நிச்சயம் ஏற்படும். ஆனால் இது எங்கு விழும் என்பதை கணிப்பது ரொம்ப கஷ்டம்.
அனேகமாக நில நடுக்கோட்டுக்கு அருகில் விழ வாய்ப்புகள் இருக்கிறது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அப்படி எனில் இந்திய பெருங்கடலை ஒட்டிய பகுதிகளில் விழலாம்.