அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று பாஜக மேலிடத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படும் நிலையில் அண்ணாமலையின் விரக்தியின் பின்னணியில் இருக்கும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மைலாப்பூர், தளி, மொடக்குறிச்சி, தகமண்டலம், அவினாசி (தனி), திருப்பூர் (தெற்கு), கோவை வடக்கு, கந்தர்வ கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோவில், விளவன்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை (தனி), ராமநாதபுரம், குளச்சல், பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) என்று பாஜகவுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது பாஜக சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 தொகுதிகள் வரை கோரியது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மயிலாப்பூர் தொகுதியை மட்டுமே வழங்கி உள்ளார். அதேபோல் கோவையில் 3 தொகுதிகள் கோரிய நிலையில் கோவை வடக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது பாஜகவினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. பாஜகவை எடுத்து கொண்டால் சென்னையில் சில தொகுதிகளிலும், கோவையில் நன்கு செல்வாக்கு உள்ளதாக நினைக்கிறது. ஆனால் அதனை அதிமுக வழங்கவில்லை.
இதற்கிடையே தான் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடும் அப்செட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது அண்ணாமலை வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. ஆனால் பாஜக மேலிடம் அவரை களமிறக்க திட்டமிட்டு மனதை கரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அண்ணாமலை கோவையில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றில் களமிறங்கலாம் என ஆலோசித்து வந்துள்ளார்.
இதனால் கோவை மாவட்டத்தில் 3 தொகுதிகளை ஒதுக்கும்படி பாஜக, அதிமுகவிடம் கோரியுள்ளது . ஆனால் எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். கோவையில் உள்ள 10ல் 9 தொகுதிகளில் அதிமுகவினர் எம்எல்ஏவாக உள்ளனர். கோவை தெற்கில் பாஜகவின் வானதி சீனிவாசன் எம்எல்ஏவாக உள்ளார். இதனால் ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதியாகி கோவை வடக்கு தொகுதியை மட்டுமே வழங்கி உள்ளார்.
கோவை மாவட்டத்தில் கோவை வடக்கு தவிர கூடுதலாக சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளை பாஜக கேட்டும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே கோவை தெற்கில் இருந்து கோவை வடக்கிற்கு மாறி களமிறங்க வானதி சீனிவாசன் முடிவு செய்து அதற்கான களப்பணியை தொடங்கிவிட்டார். இதனால் அண்ணாமலைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்ட தொகுதிகளை தவிர பிற இடங்களில் அண்ணாமலை போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் அண்ணாமலை கோவை லோக்சபா தேர்தலில் தோற்றாலும் கூட 4.50 லட்சம் வாக்குகள் பெற்றது தான் இதற்கு முக்கிய காரணம். இதனால் கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசனா? அண்ணாமலையா? யாரை களமிறக்குவது என்பதில் பாஜகவுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது முதல் விஷயமாகும்.
2வது விஷயம் என்னவென்றால் அண்ணாமலை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு அவருடைய ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னை, கோவையில் கூடுதல் தொகுதிகளை பாஜக, அதிமுகவிடம் பெறும். அதில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் வாங்கி கொடுக்க அண்ணாமலை முடிவு செய்தார். ஆனால் தற்போதைய தொகுதி ஒதுக்கீட்டால் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கு ஏற்ப சீட் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது 2 வது காரணம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக நேற்று முன்தினம் பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயலை, அண்ணாமலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது கோவையில் கூடுதல் சீட்டுகளை அதிமுக ஒதுக்காதது பற்றியும், கோவை வடக்கு மட்டுமே ஒதக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அண்ணாமலை அப்செட் ஆகி உள்ளார். மேலும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு தான் அண்ணாமலை சட்டசபை தேர்தலில் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டாம். தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என்று பாஜக மேலிடத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னதாக பியூஷ் கோயல் சந்திப்புக்கு பிறகு அண்ணாமலை வெளியே வந்தபோது பத்திரிகையாளர்களை அவரை சூழ்ந்து பேட்டி கண்ட பிறகு, “நான் யாரிடமும் சீட் கேட்கவில்லை. என்னுடைய வேலை ஒரு தொண்டனாக என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்வேன் ” என கூறி சென்றார். இது அண்ணாமலையின் அதிருப்தியை உறுதிப்படுத்தி உள்ளது. இது பாஜகவுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் அண்ணாமலைக்கு மாநிலம் முழுவதும் ஆதரவாளர்கள் உள்ளனர்.



