“கத்தாரின் எல்என்ஜி எரிவாயு மையம் மீண்டும் தாக்கப்படுமானால், ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் முழுமையாக அழிக்கப்படும்,” என்று ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோசியல் சமூக ஊடகப் பதிவில், ‘‘மத்திய கிழக்கில் நிகழ்ந்த சம்பவங்களால் ஏற்பட்ட கோபம் காரணமாக இஸ்ரேல் ஈரானில் உள்ள சவுத் பார்ஸ் எரிவாயு வயல் என்ற முக்கிய மையத்தின் மீது வன்முறைத் தாக்குதலை நடத்தியுள்ளது. சவுத் பார்ஸ் எரிவாயு வயல் எனப்படும் அமைப்பில் மிகச் சிறிய பகுதி மட்டுமே இத்தாக்குதலுக்கு உள்ளானது.
இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்னரே எதுவும் தெரிந்திருக்கவில்லை. மேலும், கத்தார் நாடு இத்தாக்குதலில் எந்த வகையிலும் எந்த வடிவிலும் சம்பந்தப்படவில்லை. அத்தாக்குதல் நிகழப்போகிறது என்பது குறித்தும் அந்நாட்டுக்கு சிறிதும் தெரிந்திருக்கவில்லை. துரதிருஷ்டவசமாக, ஈரானுக்கு இந்த உண்மைகளோ அல்லது சவுத் பார்ஸ் தாக்குதல் தொடர்பான வேறு எந்த முக்கிய விவரங்களோ தெரிந்திருக்கவில்லை.
இதன் காரணமாக எவ்வித நியாயமும் இன்றி, அநீதியான முறையில் கத்தாரின் எல்என்ஜி எரிவாயு மையத்தின் ஒரு பகுதியை ஈரான் தாக்கியுள்ளது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் மதிப்புமிக்கதுமான இந்த சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது இஸ்ரேல் இனிமேல் எவ்விதத் தாக்குதலையும் நடத்தாது. ஒருவேளை ஈரான் அறிவீனமாகச் செயல்பட்டு முற்றிலும் நிரபாரதியான கத்தார் நாட்டை மீண்டும் தாக்கத் துணிந்தால் நிலைமை மாறும்.
கத்தார் மீது ஈரான் தாக்குதல் நடத்த துணிந்தால், இஸ்ரேலின் உதவியுடனோ அல்லது உதவியின்றியோ அமெரிக்கா, சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீது ஈரான் இதுவரை கண்டிராத அளவில் தீவிர சக்தியுடனும் வல்லமையுடனும் தாக்கி முழுமையாக அழிக்கும். ஈரானின் எதிர்காலத்தின் மீது இது ஏற்படுத்தக்கூடிய நீண்ட காலத் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு இத்தகைய தீவிர வன்முறை மற்றும் அழிவை நான் அங்கீகரிக்க விரும்பவில்லை. எனினும், கத்தாரின் எல்என்ஜி மையம் மீண்டும் தாக்கப்படுமானால், அதைச் செய்ய நான் சிறிதும் தயங்க மாட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.



