No menu items!

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடங்களில் திடீர் ஈடி சோதனை – என்ன காரணம்?

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடங்களில் திடீர் ஈடி சோதனை – என்ன காரணம்?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து வருபவர் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். இவரது வீடு மற்றும் நெருங்கிய நணபர்கள், உறவினர்கள் இடங்களில் இன்று அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இ.பி.எஸ்ஸின் நெருங்கிய நண்பரான ஆர். இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வைத்திலிங்கம் வீட்டில் திடீர் சோதனைக்கு என்ன காரணம்?

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் 2011 – 2016 வரை வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார் வைத்திலிங்கம். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 24ஆம் தேதியன்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆர்.வைத்திலிங்கம் , அவரது மகன்கள் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அறப்போர் இயக்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையினர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அண்ட் இன்ப்ராட்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு, உறவினர் பன்னீர்செல்வம், முத்தம்மாள் நிறுவனம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராட்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவனம், பாரத் நிறுவனம் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கின் அடிப்படையில் தான் இப்போது அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனையில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு போலீசார் தெரிவித்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு குறிப்பிடும் விவகாரங்களில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தெலுங்கன் குடிக்காட்டில் உள்ள வைத்திலிங்கம் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் எம்எல்ஏ விடுதியில் உள்ள வைத்திலிங்கம் அறையிலும் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்திலிங்கம் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் தற்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோடம்பாக்கத்தில் நிதி நிறுவன ஊழியர் கோடீஸ்வரி என்பவர் வீட்டிலும், திருவேற்காட்டில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகத்திலும், ரவிக்குமார் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஒரத்தநாடு அருகே பேய்கரும்பன் கோட்டையில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் மைத்துனர் பன்னீர்செல்வம் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

வைத்தியலிங்கம் அரசியல் பயணம்

அதிமுகவில் சாதாரண தொண்டராக இருந்து அமைச்சர் பதவி வரை உயர்ந்தவர். அவரது அரசியல் பயணத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அவர் கடந்து வந்த பாதையை இப்போது பார்க்கலாம்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு தாலுகாவில் தெலுங்கன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் ஆர். வைத்திலிங்கம். தஞ்சாவூரில் உள்ள ராஜா சரபோஜி கலைக்கல்லூரியில் 1974-75ஆம் ஆண்டு பியூசி படிப்பில் தேர்ச்சி பெற்றார். இதனைத்தொடர்ந்து சென்னையில் பிரசிடென்சி கல்லூரியில் சைக்காலஜியில் இளங்கலைப் பட்டப்படிப்பில் 1977ஆம் ஆண்டு சேர்ந்தார். ஆனால், முழுமையாக படிப்பை முடித்து அவர் பட்டம் பெறவில்லை.

பின்னர் சென்னையிலேயே அரசியல் ஈடுபட்டு அதிமுகவில் சேர்ந்தார். பின்னர் ஊருக்குத் திரும்பியவர் உள்ளூரில் தீவிரமாக கட்சி பணியாற்றினார். இதனால், 1985ஆம் ஆண்டு இவருக்கு ஒரத்தநாடு ஒன்றிய துணைச் செயலாளர் பதவி கிடைத்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் குடும்பத்துக்கு நெருக்கமானவர் ஆர்.வைத்திலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவின் சமூகத்தை சேர்ந்தவர். இதனால் கட்சியில் அடுத்தடுத்து பதவிகள் அவரை தேடி வந்தன. 1995ஆம் ஆண்டு ஒன்றிய செயலாளர் ஆனார். கடந்த 2001ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதில் வெற்றிபெற்றார்.

2001ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த தொழில்துறை அமைச்சர் பதவி தரப்பட்டது. பின்னர் வனத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ஆம் ஆண்டு மீண்டும் ஒரத்தநாடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். அப்போதைய அதிமுக ஆட்சியில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி, வேளாண்மை துறை அமைச்சராக பதவி வகித்தார். அந்த சமயத்தில் கட்சியில் நிர்வாகிகள் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இந்த புகார்களை விசாரிப்பதற்காக 2011ஆம் ஆண்டு ஒழுங்கு நடவடிக்கை குழு ஒன்றை அதிமுக பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அமைத்தார். அந்த ஒழுங்கு நடவடிக்கை குழுவில் அப்போதைய அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், முனுசாமி ஆகியோர் இருந்தனர். முனுசாமி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பின், அந்த இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வந்தார். இவர்கள், நால்வர் அணி எனவும் கட்சியினரால் அழைக்கப்பட்டனர். ஜெயலலிதா, சசிகலா ஆகியோரிடம் நேரடி தொடர்பில் இருந்ததால் இந்த நால்வர் அணியினருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. குறிப்பாக டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற முறையில் ஆர்.வைத்திலிங்கத்துக்கு கூடுதல் செல்வாக்கு இருந்தது.

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் ஒரத்தநாடு தொகுதியில் ஆர்.வைத்திலிங்கம் போட்டியிட்டார். ஆனால், அப்போது அவர் திமுக வேட்பாளர் ராமசந்திரனிடம் 3645 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விடைந்தார். அப்போது அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோதிலும் ஆர்.வைத்திலிங்கம் தோற்றது சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், மாநிலங்களவை உறுப்பினர் பதவி அவருக்கு வழங்கப்பட்டது.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து சசிகலா ராஜினாமா செய்யக் கூறினார். இதனால் அதிருப்தியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் தியானம் மேற்கொண்டு தனித்து செயல்பட்டார். இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் முதலமைச்சர் ஆவது தடுக்கப்பட்டது. எனவே, சிறைக்கு செல்லும் முன்பு அடுத்த முதலமைச்சர் தேர்வு சென்னை கூவாத்தூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் பதவிக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. அப்போது ஆர்.வைத்திலிங்கத்தை முதலமைச்சர் ஆக்கலாம் என்று சசிகலா பரிசீலித்ததாக கூறப்பட்டது. ஆனால், அப்போது அவர் எம்எல்ஏவாக இல்லாத சூழலில் அடுத்ததாக எடப்பாடி பழனிசாமியை சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்தார்.

ஆனால், ஆர். வைத்திலிங்கம்தான், “சசிகலாவை அதிமுகவிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அறிவித்தார். சசிகலாவின் ஆதரவாளரை வைத்தே சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிக்க செய்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்தார் என்று கூறப்பட்டது. இதற்கு பதிலடியாக அப்போது டிடிவி தினகரன், ஆர்.வைத்திலிங்கத்தை அதிமுகவின் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அப்போது சிறையில் இருந்த சசிகலாவின் ஒப்புதலின் பேரில் இந்த நீக்கம் செய்யப்பட்டதாக கூறினார்.

டெல்டா மாவட்டத்தில் அதிமுகவை கட்டிக்காக்க வேண்டும் எனில் ஆர்.வைத்திலிங்கம் கட்சியில் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி புரிந்து கொண்டார். எனவே, அவரை கட்சியில் வைத்துக் கொண்டார். இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது டெல்டா பகுதியில் தாம் சொல்லும் நபர்களுக்குத்தான் சீட் கொடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை நிர்பந்தித்து அதில் ஆர்.வைத்திலிங்கம் வெற்றியும் பெற்றார். தஞ்சை மாவட்ட செயலாளர் ஆக இருந்து வந்த ஆர்.வைத்திலிங்கம், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி வகித்தார். மீண்டும் 2021ஆம் ஆண்டு ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தம்மை 2016ஆம் ஆண்டு தோற்கடிக்க செய்த ராமசந்திரனை 2021ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடித்தார்.

இந்நிலையில், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும், அதிமுக ஆட்சி அமையாததற்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் மீண்டும் இணையாததுதான் காரணம் என்று எடப்பாடி பழனிசாமியிடம் வைத்திலிங்கம் துணிச்சலாகச் சொன்னார். ஆனால், அதனை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. இதனால் அவரை எடப்பாடி பழனிசாமி ஓரம்கட்டினார்.

இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருடன் ஆர்.வைத்திலிங்கமும் நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் ஓ.பி.எஸ் ஆதரவாளராக ஆர்.வைத்திலிங்கம் செயல்பட்டு வருகிறார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகிய மூவரையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று ஆர்.வைத்திலிங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சசிகலா தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்றிருந்தார். அப்போது, காரில் பயணித்துக் கொண்டிருந்த ஆர்.வைத்திலிங்கம் சசிகலா சென்ற காரை பார்த்து நிறுத்தினார். சசிகலா சிறை செல்வதற்கு முன்பு அவரை சந்தித்த ஆர்.வைத்திலிங்கம், அதன் பின்னர் அவரை சந்திக்கவில்லை. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அரசியல் ரீதியான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

அரசியல் வாழ்க்கையில் பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்த ஆர்.வைத்திலிங்கம் இன்று நடைபெறும் சோதனைகளையும் எதிர்கொள்வார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈபிஎஸ் ஆதரவாளர் இளங்கோவன் இடங்களிலும் சோதனை

வைத்தியலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில், இ.பி.எஸ்ஸின் நெருங்கிய நண்பரான ஆர். இளங்கோவனுக்கு சொந்தமான தனியார் கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆர். இளங்கோவன், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தமிழக மாநில வங்கியின் தலைவராகவும் பதவி வகித்தவர். தற்போது சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க.,செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக திருச்சி முசிறி அருகே கல்லூர் ஒன்று உள்ளது.

இந்நிலையில், இன்று (23-10-24) இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவையில் உள்ள இளங்கோவனின் உறவினர் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இளங்கோவன் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய்க்கு சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சோதனை குறித்து இளங்கோவன் கூறிய போது, “எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. கல்லூரியில் கடந்த 3 நாட்களாக வருடாந்திர கணக்கு தணிக்கை நடைபெறுகிறது” விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...