தீபாவளி பண்டிகையை ஒட்டி நாடு முழுவதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ஆகி உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்வதற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் 5%, 12%, 18% மற்றும் 28% என 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி கடந்த மாதம் 22-ம் தேதி 5%, 18% என 2 அடுக்குகளாக மாற்றப்பட்டது.
இது ஜிஎஸ்டி 2.0 என்றும், நாட்டு மக்களுக்கான தீபாவளிப் பரிசு என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்நிலையில் இதுதொடர்பாக அண்மையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி குறைப்பால் நுகர்வோருக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். பண்டிகை காலத்தில் மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள் விற்பனை வேகமாக உயரும். பிரதமரின் தீபாவளி பரிசு மக்களை முழுமையாக சென்றடையும்.
உள்நாட்டு பொருட்களுக்கு மக்கள் முன்னுரிமை அளித்துள்ளனர். தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அதற்கேற்ப இந்த ஆண்டு தீபாவளி விற்பனை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தீபாவளிக்கு 2 நாள் முன்னதாக தந்தேரஸ் கொண்டாடப்படும். லட்சுமி தேவி அருள் கிடைப்பதற்காக இந்த 2 நாட்களில் தங்கம், வெள்ளி, பாத்திரங்கள் புதிதாக வாங்கி வீட்டில் பூஜை செய்வது வழக்கம். அதன்படி, இந்த 2 நாட்களில் தங்கம், வெள்ளி அதிகளவில் விற்பனையாகி உள்ளன.
இதுகுறித்து அனைத்து இந்திய ஜெம் அண்ட் ஜுவல்லரி டொமஸ்டிக் கவுன்சில் தலைவர் ராஜேஷ் ரோக்தே கூறியதாவது: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தந்தேரஸ் காலத்தில் (2 நாட்கள்) நாடு முழுவதும் 50 முதல் 60 டன் தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.85 ஆயிரம் கோடி.
இது கடந்த ஆண்டின் விற்பனை தொகையைவிட 35 முதல் 40 சதவீதம் ஆகும். ஆனால், விற்பனையான நகையின் அளவைப் பொறுத்த அளவில் கடந்த ஆண்டின் அளவிலேயே இருந்தது. இதற்கு கடுமையான விலை உயர்வே காரணம்.
தீபாவளி பண்டிகை முடிவில் (5 நாள்) தங்கம் விற்பனை 100 முதல் 120 டன்னை எட்டும் (ரூ.1 லட்சம் கோடி முதல் ரூ.1.35 லட்சம் கோடி) என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், சிலர் வெள்ளியை வாங்கினர். இதனால் வெள்ளியின் விற்பனை 2 மடங்கு அதிகரித்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
டிவி, பிரிட்ஜ் ரூ.10 ஆயிரம் கோடி: இந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன், ஏசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் விற்பனை ரூ.10 ஆயிரம் கோடியைத் தாண்டி உள்ளதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (சிஏஐடி) புள்ளி விவரம் கூறுகிறது. மின்னணு சாதன உற்பத்தித் துறை வேகமாக வளர்ந்து வருவதாகவும், இத்துறையின் மூலம் 25 லட்சம் பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாகவும் சிஏஐடி தெரிவித்துள்ளது.
டாஸ்மாக்கில் 3 நாட்களில் ரூ.789 கோடி வசூல்: தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மது விற்பனையாகிறது. சனி, ஞாயிறு உள்ளிட்ட வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும் பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறும்.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வந்ததால் 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதனால் மது விற்பனையும் களை கட்டியது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய சனி, ஞாயிற்றுக்கிழமையையும் சேர்த்து 3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று ரூ.235.94 கோடிக்கு மது விற்றது. இந்த ஆண்டு கூடுதலாக ரூ.30 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.170.64 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.