2025 ஆகஸ்ட் 15 முதல் ரூ.3,000 விலையில் ஆண்டு கட்டண பாஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதன்கிழமை அறிவித்தார்.
ஆகஸ்ட் 15 முதல், வணிக நோக்கமற்ற தனியார் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற பயணத்தை அனுபவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பாஸ்ட்டேக் பாஸ் பெறுவதன் மூலம்.. வருடம் முழுக்க 200 பயணங்களை இவர்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
ஃபாஸ்டேக் பாஸ் அறிமுகம்
மேலும், இந்த பாஸ் தற்போதுள்ள ஃபாஸ்டேக்கில் செயல்படுத்தப்படும் என்றும், செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்கள் (எது முன்னதாக வருகிறதோ அதுவரை) செல்லுபடியாகும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியை ஒருமுறை கடப்பது ஒரு பயணமாகக் கணக்கிடப்படும். ஒரு சுற்றுப்பயணம் இரண்டு பயணங்களாகக் கணக்கிடப்படும். மொத்தமாக 200 பயணங்களை மேற்கொள்ள.. அதாவது 200 டோல் கேட்டுகளை கடக்க அனுமதி அளிக்கப்படும்
நிதின் கட்கரி கூறுகையில், “200 பயணங்களுக்கு, ஒரு பயனர் தற்போது ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 செலுத்த வேண்டும். இப்போது, இது ரூ.3,000 ஆக குறையும். இந்த ஆண்டு பாஸ் நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை உறுதி செய்யும். இதற்கான பிரத்யேக இணைப்பு ராஜமார்க்யாத்ரா செயலி மற்றும் NHAI மற்றும் MoRTH ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் விரைவில் கிடைக்கும்.”
இந்த ஆண்டு பாஸ் மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளுக்குப் பொருந்தாது. பயனர்கள் தங்கள் ஃபாஸ்டேக் மூலம் மாநில மற்றும் பிற சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தலாம், ஆனால் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மட்டுமே ஆண்டு பாஸ் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும்.
வாகனம் மற்றும் அதனுடன் இணைந்த ஃபாஸ்டேக்கின் தகுதியை சரிபார்த்த பின்னரே ஆண்டு பாஸ் செயல்படுத்தப்படும் என்று மத்திய சாலை அமைச்சகம் வெளியிட்ட FAQ-ல் கூறப்பட்டுள்ளது. வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, பயனர் ராஜமார்க்யாத்ரா மொபைல் அப்ளிகேஷன் அல்லது NHAI இணையதளம் மூலம் அடிப்படை ஆண்டான 2025-26க்கு ரூ.3,000 செலுத்த வேண்டும்,” என்று அந்த FAQ-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் சில காலமாக ஆண்டு பாஸ் அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வந்தது. தூர அடிப்படையிலான கட்டணங்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருந்தது, ஆனால் அது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு ஆண்டு கட்டண பாஸ் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம் தனியார் வாகன உரிமையாளர்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் தடையின்றி பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபாஸ்டேக் தொழில்நுட்பம்
ஃபாஸ்டேக் என்பது ஒரு மின்னணு கட்டண வசூல் அமைப்பு ஆகும். இது ரேடியோ அலைவரிசை அடையாள தொழில்நுட்பத்தைப் (RFID) பயன்படுத்துகிறது. இதன் மூலம் சுங்கச்சாவடியில் வாகனத்தை நிறுத்தாமல், நேரடியாக ப்ரீபெய்ட் அல்லது சேமிப்புக் கணக்கிலிருந்து கட்டணம் செலுத்த முடியும். இந்த ஃபாஸ்டேக் வாகனத்தின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டிருக்கும்.
தற்போது, ஒரு சுங்கச்சாவடியை கடந்து செல்லும் உள்ளூர் பயணிகளுக்கு மட்டுமே ரூ.340 விலையில் மாதாந்திர பாஸ் வழங்கப்படுகிறது.
60 கி.மீ சுற்றளவில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் குறித்த நீண்டகால கவலைகளையும் இந்த கொள்கை நிவர்த்தி செய்வதாக கட்கரி கூறினார். தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகள் 2008-ன்படி, இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையிலான தூரம் 60 கி.மீ ஆகும். “தற்போது, ஒரு சுங்கச்சாவடியை கடப்பதற்கான சராசரி கட்டணம் ரூ.50 முதல் ரூ.100 வரை மாறுபடும். இந்த பாஸ் காரணமாக இது இப்போது ரூ.15 ஆக குறையும்,” என்று நெடுஞ்சாலை சாலை அமைச்சகம் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கட்கரி கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், காத்திருப்பு நேரத்தை குறைப்பதன் மூலமும், நெரிசலை குறைப்பதன் மூலமும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தகராறுகளை குறைப்பதன் மூலமும், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான வாகனங்கள் எளிதாக பயணம் செய்துள்ளன.