No menu items!

‘முரசொலி’ செல்வம் மறைவு: கடைசித் தோளை இழந்து நிற்கிறேன் – ஸ்டாலின் உருக்கம்

‘முரசொலி’ செல்வம் மறைவு: கடைசித் தோளை இழந்து நிற்கிறேன் – ஸ்டாலின் உருக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவரும் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகனும் எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளரும் ‘முரசொலி’ செல்வம் இன்று காலமானார்.

கலைஞர் கருணாநிதியின் சகோதரியின் மகன்தான் செல்வம். இவர், திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘முரசொலி’ பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, தொடங்கப்பட்ட திமுகவின் நாளிதழான ‘முரசொலி’ நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு அடுத்தபடியாக நீண்டநாள் ‘முரசொலி’ பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராக இருந்துள்ளார் செல்வம். இவர் 50 ஆண்டுகளுக்கு மேல் முரசொலியின் வளர்ச்சிக்காக பணியாற்றி உள்ளார்.  ‘முரசொலி’ நாளிதழில் ‘சிலந்தி’ என்ற தலைப்பின் கீழும் பல ஆணித்தரமான கட்டுரைகளை எழுதியவர். பல திரைப்படங்களில் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

தற்போது 84 வயதாகும் ‘முரசொலி’ செல்வத்துக்கு வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென இன்று காலை இவரின் உயிர் பிரிந்திருக்கிறது. நேற்று இரவு கூட, ‘முரசொலி’ நிர்வாகிகளோடு செல்போனில் செல்வம் கலந்துரையாடினார் என சொல்லப்படுகிறது.

செல்வம் மறைவு தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும் தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.

தலைவர் கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலியின் பணிகளைத் தன் தோளில் சுமந்துகொண்டு இளமைப் பருவம் முதலே திறம்படச் செயலாற்றியவர் அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞரும் அவரது மனசாட்சியான முரசொலி மாறனும் மனதில் நினைப்பதை எழுத்தில் – செயலில் நிறைவேற்றியவர் பாசத்திற்குரிய முரசொலி செல்வம். கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர். அடக்குமுறைக்கு அஞ்சாமல் சட்டமன்றத்தில் கூண்டிலேறி கருத்துரைத்தவர். “முரசொலி சில நினைவுகள்” என்ற அவரது புத்தகத் தொகுப்பு முரசொலி எதிர்கொண்ட நெருக்கடிகளையும் முரசொலியோடு செல்வத்துக்கு இருக்கும் பின்னிப் பிணைந்த உறவையும் எடுத்துரைப்பது ஆகும். தேர்தல் களம் முதல் திரைப்படப் பணிகள் வரை அனைத்துத் துறைகளிலும் முத்திரையைப் பதித்தவர்.

எந்த நிலையிலும் கழகமே மூச்சு என வாழ்ந்த கொள்கைச் செல்வம் அவர். அதிர்ந்து பேசாதவர். ஆனால், ஆழமான கொள்கைவாதி. சிலந்தி என்ற பெயரில் முரசொலியில் அவர் எழுதிய நையாண்டியும் நகைச்சுவையும் ததும்பும் கட்டுரைகள் கழகத்தின் இளைய தலைமுறையினருக்குக் கொள்கை இரத்தம் பாய்ச்சும் வலிமை கொண்டவை. நேற்று முன்தினம்கூட முரசொலியில் கட்டுரை எழுதிய அவர், இன்று காலையில் அடுத்த கட்டுரைக்கான குறிப்புகளை எடுத்துவைத்துவிட்டு, சற்று கண்ணயர்ந்த நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதைக் கேட்டதும் இதயம் அதிர்ந்து, நொறுங்கிவிட்டேன்.

சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக – வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர் என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம். தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன். என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்!

செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே… திராவிட இயக்கத்தின் படைக்கலனே… கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர்” என தெரிவித்துள்ளார்.

‘முரசொலி’ செல்வம் மறைவுக்கு திமுகவினர் மட்டுமல்லாமல் பிற கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அரசியலில் கலைஞருக்கு துணையாக இருந்தவர். அதன் காரணமாகவே பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டவர். மிகவும் அமைதியான இயல்பு கொண்டவர்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...