இந்துக்களை ஒருங்கிணைத்துள்ளது மதுரை முருக பக்தர்கள் மாநாடு என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: நமது வாழ்வியல் முறைக்குத் தொடர்ந்து இடையூறு வருகிறது. அதை எதிர்ப்போம். இதற்காகவே மதுரையில் இந்த மாநாடு நடக்கிறது. நமது வாக்கைப் பெற்று அதிகாரத்தில் இருப்போர், கோயில்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கின்றனர். முதல் படை வீடான திருப்பரங்குன்றத்துக்கே இடையூறு செய்தனர். அடுத்தடுத்த வீடுகளுக்கும் இடையூறு செய்வர்கள். நமது முன்னோர் பாதுகாத்துக் கொடுத்துள்ளதை நாம் பாதுகாக்க வேண்டும்.
மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை மக்கள் அமைதியாக தரிசித்துச் செல்கின்றனர். அறுபடை வீடுகளில் காசு கொடுக்காமல் தரிசிக்க முடியாது. எங்காவது ஓரிடத்தில் அறநிலையத் துறையின் செயல்பாடு நேர்மையாக இருக்கிறதா? ஆன்மிகத்தை மையமாகக் கொண்டு வாழ்வியலை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது அரசியலுக்கான மாநாடு அல்ல.
யாருக்கும் நாம் எதிரிகள் அல்ல: நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் கிறிஸ்வ, இஸ்லாமிய மக்கள்தொகை கூடியுள்ளது. நமது கலாச்சாரச் சின்னம் அழியக்கூடாது; மதம் மாறக் கூடாது. கந்த சஷ்டி கவசப் பாடல், சக்தியைக் கொடுக்கும். நமது பண்டைய கலாச்சாரம், பண்பாடுகளைத் தேடிப் படிக்க வேண்டும். யாருக்கும் நாம் எதிரிகள் அல்ல.
திருப்பரங்குன்றத்தில் ஒரு தலைவர் நேற்றைக்கு சுவாமி கும்பிட்டபோது, நெற்றியில் பூசிய திருநீறை அழித்துவிட்டு, ஒரு பெண் பக்தருடன் செல்ஃபி எடுத்தார். நாளைக்கு அவர் உங்களிடம் வாக்குப்பிச்சை கேட்டு வருவார். அப்போது அவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
கோயில்களைச் சார்ந்த நகரங்கள் செழிப்பாக இருக்கின்றன. திருப்பதி கோயிலுக்கு 917 இடங்களில் ரூ.2.47 லட்சம் கோடி சொத்துகள் உள்ளன. கோயிலைச் சார்ந்து நகரங்கள் இருந்தால் ஆன்மிகம், வாழ்வியல், பொருளாதாரம் நன்றாக இருக்கும். மதுரை முருக பக்தர்கள் மாநாடு இந்துக்களை ஒருங்கிணைத்துஉள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.