இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய சாலை உள்கட்டமைப்பு அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “இந்திய சாலை உள்கட்டமைப்பு ஏற்கெனவே மாறிவிட்டது. எனினும், நீங்கள் இப்போது பார்ப்பது வெறும் ட்ரெய்லர்தான். படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளில், இந்திய சாலை உள்கட்டமைப்பு, அமெரிக்காவைப் போலவே இருக்கும். இதை நீங்கள் காண்பீர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த சிலர் என்னிடம் பேசும்போது, இந்திய சாலை உள்கட்டமைப்பு வசதிகள் அமெரிக்காவை விட சிறப்பாக இருப்பதாகக் கூறினார்கள்.
மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள நல்ல சாலைகளால் இந்தியாவில் தளவாடச் செலவுகள் குறைத்துள்ளன. அது ஏற்றுமதிக்கான போட்டித்தன்மையை மேலும் மேம்படுத்தும். நாம் நமது ஏற்றுமதியை உயர்த்தினால், அது நமது விவசாயத் துறை, உற்பத்தித் துறை, சேவைத் துறை உட்பட அனைத்து துறைகளையும் மேம்படுத்தும். இந்தியாவில் தளவாடச் செலவு 16 சதவீதமாக இருந்தது. இது சீனாவில் 8 சதவீதமாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12 சதவீதமாகவும் உள்ளது. மேம்பட்ட சாலைகள் மூலம், பாஜக தலைமையிலான அரசாங்கம் தளவாடச் செலவுகளை 9 சதவீதமாகக் குறைத்ததாகக் குறைத்துள்ளது.
இந்தியாவில் தற்போது, 25 பசுமை வழி விரைவுச் சாலைகள், 3,000 கி.மீ துறைமுக இணைப்பு நெடுஞ்சாலைகள், ஆன்மிக சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள் ஆகியவை ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. புத்த மத சுற்றுலாத் தலங்களை இணைக்கும் சாலைகள், சார் தாம் கோயில்களை இணைக்கும் சாலைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை,
ஜம்மு மற்றும் ஸ்ரீநகருக்கு இடையே 36 சுரங்கப்பாதைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இவற்றில் 23 சுரங்கப்பாதைகள் நிறைவடைந்துள்ளன. மேலும் 5 சுரங்கப் பாதைகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 35 மல்டி-மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களையும் நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
பொது உள்கட்டமைப்பு என்பது பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாகும். வர்த்தகம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை இது மேம்படுத்துகிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியா, கடந்த பத்தாண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.