ட்விட்டரின் நிறுவனரான ஜாக் டோர்சி இப்போது பிட்சாட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். மற்ற மெசேஜிங் செயலிகளில் இணையச் சேவை இருந்தால் மட்டுமே மெசேஜ் அனுப்ப முடியும். ஆனால், இதில் இணைய வசதியோ அல்லது சிம் இல்லாமலேயே மெசேஜ் அனுப்பலாம். இந்தச் செயலி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ட்விட்டர் நிறுவனத்தைக் கடந்த 2006ம் ஆண்டு தொடங்கியவர் ஜாக் டோர்சி. இன்று ட்விட்டர் இந்தளவுக்குப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்றால் அதற்குப் பிரதானக் காரணம் ஜாக் டோர்சி தான். 2007 முதல் 2011ம் ஆண்டு வரை ட்விட்டர் நிறுவனம் முழுமையாக இவரது கண்ட்ரோலில் தான் இருந்தது. 2021ல் சில காரணங்களால் அவர் ட்விட்டரில் இருந்து விலகினார். பிறகு எலான் மஸ்க் வசம் ட்விட்டர் போனது தனிக்கதை!
இதற்கிடையே ட்விட்டரின் நிறுவனரும் அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி இப்போது பிட்சாட் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். ஏற்கனவே வாட்ஸ்அப், ஸ்னாப்சாட், டெலிகாரம் எல்லாம் இருக்கும் போது இது என்ன பிட்சாப் என நீங்கள் கேட்கலாம். இந்த பிட்சாட் மற்ற செயலிகளில் இருந்து ரொம்பவே தனித்துவமானது.
இவை ப்ளூடூத் மெஷ் நெட்வொர்க்குகள் மூலம் இயங்கும். இணையம், தொலைபேசி எண்கள் அல்லது சர்வர்கள் கூட இல்லாமல் இதனால் இயங்க முடியும். இப்போது இந்த பிட்சாட் டெஸ்ட்ஃப்ளைட் மூலம் பீட்டா வெர்ஷனில் உள்ளது. டோர்சி இது தொடர்பான அறிவிப்பைத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் பிட்சாட் பற்றிய விவரங்களைத் தெளிவாக விளக்கியுள்ளார்.
பிட்சாட் என்பது தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு செயலியாகும். இது ஆஃப்-கிரிட் தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நாம் அனுப்பும் அனைத்து மெசேஜ்களும் என்கிரிப்ட் செய்யப்பட்ட பிறகே அனுப்பப்படும். இந்த மெசேஜ்கள் ப்ளூடூத் மூலம் அருகிலுள்ள சாதனங்களுக்கு இடையே அனுப்பப்படுகின்றன..
மக்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது, ப்ளூடூத் கிளஸ்டர்களுக்கு இடையில் இந்த மெசேஜ்கள் செல்லும். இதனால் இதில் எந்தவொரு மத்திய சர்வரும் இருக்காது. பரவலாக்கப்பட்ட மெஷ் நெட்வொர்க் உருவாகிறது. சில சாதனங்கள் நெட்வொர்க்கின் வரம்பை நீட்டிக்கப் பாலங்களாகச் செயல்பட முடியும் என்பதே இதன் கான்சப்ட். மேலும், இதில் யூசர்கள் கணக்கு தொடங்கும்போது, அவர்களின் பெயர், விவரங்கள் என எந்தொரு தகவலும் சேகரிக்கப்பாது.
மேலும், இந்த கன்சப்ட்டில் வரும் முதல் செயலி இதுவல்ல. ஏற்கனவே ப்ளூஸ்கை மற்றும் டாமஸ் ஆகிய செயலிகள் இதே வெர்ஷனில் இயங்கி இருக்கிறது. 2019ஆம் ஆண்டு ஹாங்காங் போராட்டங்களின்போது இதே டெக்னாலஜியில் இயக்கும் பிரிட்ஜ்பை செயலி தான் அங்குப் பயன்படுத்தப்பட்டது. அதாவது அப்போது இணையச் சேவை மொத்தமாக முடக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாற இந்த பிரிட்ஜ்ஃபை மெஷ் செயலியையே பயன்படுத்தினர்.
இந்த பிட்சாட் செயலியில் பாஸ்வோர்ட் மூலம் இயங்கும் க்ரூப் சாட்களும் இருக்கிறது. இந்த க்ரூப்பில் இணையவே குறிப்பிட்ட பாஸ்வோர்ட் தேவை. மேலும், யூசர் ஆஃப்லைனில் இருந்தாலும்கூட, தாமதமான செய்திகளைப் பெறும் வசதியும் இருக்கிறது. இப்போது இது ப்ளூடூத் மூலம் மட்டுமே இயங்கும். வரும் காலத்தில் வை-பை மூலம் வைஃபை டைரக்ட் சேர்க்கப்படும். இது மெசேஜிங் வரம்பை கணிசமாக அதிகரிக்கும்.