No menu items!

இந்தியாவுக்கு 21 மில்லியன் ஏன்? – ட்ரம்ப் கேள்வி

இந்தியாவுக்கு 21 மில்லியன் ஏன்? – ட்ரம்ப் கேள்வி

அதிபர் ட்ரம்ப், “இந்தியாவின் வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க பைடன் நிர்வாகம் 21 மில்லியன் டாலரை வாரிவழங்கியது ஏன்? அவர்கள் அங்கே வேறு யாரோ தேர்வாக வேண்டும் என்பதற்காகக் கொடுத்திருக்கலாம் என நான் ஊகிக்கிறேன். இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பு என்பதை இந்திய அரசாங்கத்துக்கு சொல்ல வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

முன்னதாக, அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதை அடுத்து, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் ‘அரசு செயல் திறன்'(டிஓடிஜி) என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இந்த துறை அமெரிக்க அரசின் செலவினங்களை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட இருந்த நிதியுதவி ரத்து செய்யப்படுவதாக டிஓடிஜி அண்மையில் அறிவித்தது. இதன்படி இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி ($21 மில்லியன்) நிதியுதவி ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஓடிஜி தெரிவித்திருந்தது. எனினும், இந்த தொகை இந்தியாவில் எந்த அமைப்புக்கு வழங்கப்பட இருந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

ட்ரம்ப்பின் இந்தக் கருத்து இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “இந்தியாவில் வாக்காளர் பங்கேற்பை அதிகரிப்பதற்காக 21 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்கப்பட இருந்ததாக அமெரிக்காவிலிருந்து வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் தலையிடுவதாகாதா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். இத்தகைய நிதி உதவியால் யார் பயனடைகிறார்கள்?” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியிருந்தார்.

அதேபோல், ஆளும் பாஜக அரசு இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸை கடுமையாகக் குற்றஞ்சாட்டி வருகிறது. இது இந்திய தேர்தல் நடைமுறையில் அந்நிய செல்வாக்கு, தலையீடு ஏற்பட காங்கிரஸே காரணம் எனக் கூறியுள்ளது.

பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கடந்த 2012-ம் ஆண்டில் தலைமை தேர்தல் ஆணையராக குரேஷி பதவி வகித்தார். அப்போது அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் அறக்கட்டளையுடன் குரேஷி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சோரஸின் அறக்கட்டளைக்கு அமெரிக்க அரசே பெருமளவில் நிதியுதவி வழங்கி வருகிறது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் மத்திய அரசின் அமைப்புகளில் ஊடுருவின. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிதியை பாஜக பெறவில்லை. அப்படியென்றால் அமெரிக்காவின் நிதியுதவியை பெற்றது யார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

முன்னாள் தேர்தல் ஆணையர் விளக்கம்: இந்தக் குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்த குரேஷி, “நான் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, ​​2012 இல் IFES உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது. அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் பயிற்சி மற்றும் வள மையமான IIIDEM மூலம் விருப்பமுள்ள நாடுகளுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தோம்.

ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதியுதவி அல்லது நிதி அளிப்பதாக வாக்குறுதி என எதுவும் இல்லை. உண்மையில், இருபுறமும் எந்தவொரு நிதி மற்றும் சட்டப்பூர்வ கடமையும் இருக்காது என்பதை புரிந்துணர்வு ஒப்பந்தம் தெளிவுபடுத்தியது.

எந்தவொரு தெளிவின்மைக்கும் இடமளிக்காதபடி இந்த நிபந்தனைகள் இரண்டு வெவ்வேறு இடங்களில் செய்யப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய எந்தவொரு நிதியையும் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது மற்றும் தீங்கிழைக்கும் செயல்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் மியாமி பேச்சில், பைடன் நிர்வாகம் எதற்காக இந்தியாவுக்கு 21 மில்லியன் அமெரிக்க டாலரை வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அளிக்க வேண்டும் என்பதை இந்தியா கவனிக்க வேண்டும் என்ற தொனியில் பேசியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...