ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.. குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவு பலருக்கும் சாத்தியமே இல்லை என்பது தான் எதார்த்தம் ஆகும். ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் விவகாரத்திலும், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் விவகாரத்திலும் இரண்டு நல்ல விஷயங்களை ரயில்வே செய்திருக்கிறது. ஒன்று விரைவில் நடக்க போகிறது. இன்னொன்று ரிசர்வ் வங்கி அனுமதிக்காக காத்திருக்கிறது.
இந்தியாவில் ரயிலில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் பலரும் ரயிலில் செல்லவே விரும்புகிறார்கள். ரயிலில் பல கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடியும். எந்த அலுப்பும் ஏற்படாது. வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் நீண்ட தூரப்பயணத்திற்கு ரயில்களை தான் தேர்வு செய்கிறார்கள். ரயில்களில் கழிவறை வசதி, படுக்கை வசதி, ஏசி வசதி உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. ரயில்கள் இந்தியாவில் முக்கியமான போக்குவரத்தாக உள்ளது. ஆனால் ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது அவ்வளவு எளிதாக இருக்காது. ஏனெனில் எப்போதுமே வெயிட்டிங் லிஸ்ட் போடும் அளவிற்கு மக்கள் கூட்டம் பல ரயில்களில் அலை மோதுகிறது.
பேமெண்ட் இடைத்தரகர்கள்
பொதுவாக ரயில்களில் பயணம் செய்ய வேண்டுமென்றால் ஐ.ஆர்.சி.டி.சி. மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும் அதில் பொதுமக்கள் பணம் செலுத்தும்போது, பல்வேறு பேமெண்ட் இடைத்தரகர்கள் மூலம் தான் செலுத்த முடியும் நிலை இருக்கிறது. அதாவது போன்பே, பே-டிஎம் ஆகியவை மூலம் பணம் செலுத்த முடியும்.
ரிசர்வ் வங்கி அனுமதி
எனவே ஐ.ஆர்.சி.டி.சி. சுயபண பரிமாற்ற சேவையை வழங்குவதற்கு ஆர்.பி.ஐ.யிடம் விண்ணப்பம் செய்து உள்ளது. அதற்கு முன்னர் கடந்த 2023-ம் ஆண்டு இதுபோன்று விண்ணப்பம் செய்தபோது ரிசர்வ் வங்கி அதனை நிராகரித்துவிட்டது. ஆனால் இந்த முறை அனுமதி உறுதியாக கிடைக்கும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. நம்பிக்கையுடன் உள்ளது. அதுவும் இன்னும் 3 மாதத்திற்குள் இதற்கு ஆரம்பகட்ட அனுமதி கிடைத்துவிடும் என்றும், உடனே சேவை தொடங்கப்படும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி. கூறியுள்ளது.
எளிதாக டிக்கெட் முன்பதிவு
இந்த சேவை தொடங்கிவிட்டால் பொதுமக்கள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். மற்ற பேமெண்ட் நுழைவாயில்களை நம்பி இருக்க தேவையில்லை. மேலும் டிக்கெட் உறுதி செய்யப்படாவிட்டால் பணம் திரும்ப பெறுதலும் உடனடியாக நடக்கும் என்று ஐஆர்சிடிசி தரப்பு கூறுகிறது.
தட்கல் புக்கிங்
இரண்டாவது நல்ல விஷயம் என்னவென்றால், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இனி இ ஆதார் கட்டாயம் ஆக உள்ளது. தற்போதைய நிலையில் புரோக்கர்கள் ஆதிக்கம் காரணமாக தட்கல் டிக்கெட் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. புரோக்கர்கள், சில ரயில்வே பணியாளர்களுடன் கூட்டு சேர்ந்து டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கி குவித்து டிக்கெட், சாமானியர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
புரோக்கர்கள் பிரச்சனை
சரியாக 11மணிக்கு இருக்கும் டிக்கெட்டை எடுக்க முயற்சித்தால் 11.03 வரை சுற்றிக்கொண்டே இருக்கும். பேமெண்ட் ஆப்சனுக்குள் போகும் போது, வெயிட்டிங் லிஸ்ட் வந்துவிடும். இதற்கு புரோக்கர்களே காரணம் என்ற புகார்கள் உள்ளது. அது எப்படி சரியாக 11.01 முதல் 11.03 வரை மொத்தமாக சைட் முடங்கும் என்று கேள்வி எழுப்பும் மக்கள், ரயில்வே அதிகாரிகள் சிலரின் உதவியுடன் இப்படி டிக்கெட்டுகளை மொத்தமாக எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு உள்ளது.
ஆதார் கட்டாயம்
இந்நிலையில் ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இனி இ ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.