முதல்முறையாக அதிபராக பொறுப்பேற்றபோதே கல்வித் துறையைக் கலைக்கும் பணிகளை டிரம்ப் மேற்கொண்டார். ஆனால், அமெரிக்க காங்கிரஸ் இந்த நடவடிக்கைக்கு ஒப்புக் கொள்ளவில்லை.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ள டிரம்ப், வியாழக்கிழமை மாலை அமெரிக்க மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி ஆணையர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்துகொண்டபோது, கல்வித் துறையைக் கலைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
மாணவர்களுக்கு மத்தியில் அமர்ந்து கையெழுத்திட்ட டிரம்ப், ”அதிகளவிலான நிதியை செலவழித்தும் 8-ஆம் வகுப்பு மாணவருக்கு வசிக்கவும், கணித கணக்கு போடுவதிலும் சிரமம் இருக்கிறது. இதனால், கல்வித் துறையை மாகாணங்களின் பொறுப்புகளுக்கே மீண்டும் அளிக்கப்படுகிறது. தோல்வியடைந்த ஒரு அமைப்பிடம் இருந்து குழந்தைகளும் பெற்றோர்களும் விடுவிக்கப்படுகிறார்கள்” என்றார்.
அமெரிக்க கல்வித்துறையின் கீழ் 1,00,000 அரசுப் பள்ளிகள் மற்றும் 34,000 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளின் 85 சதவிகித செலவீனங்களை மாகாண அரசுகள் வழங்குகின்றன.
ஆனால், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அமெரிக்க மத்திய கல்வித் துறையே கவனித்து வருகின்றது. 1.6 டிரில்லியன் டாலர் கடன் தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜோ பைடனின் ஆட்சிக் காலத்தில் கல்வித்துறையில் தனது தாராளமயமாக்கல் கொள்கையை அவர் புகுத்தியதாகவும் தேர்தலின்போது பைடன் குற்றம்சாட்டிவந்தார்.
மேலும், கூட்டாட்சி தத்துவத்தை மதிக்கும் நோக்கில் கல்வித் துறையை முழுமையாக நிர்வகிக்கும் பொறுப்பை மாகாணங்களுக்கு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்.
இருப்பினும், அமெரிக்க செனட் அவை ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த உத்தரவு அமலுக்கு வரும்.