தமிழக சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும், தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநர் தலையீடு அதிகரிப்பதாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முழுவதும் தமிழக அரசு மற்றும் ஆளுநரின் தரப்பு வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டன.
தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவெடுக்காமல் வைத்திருக்கிறார். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும்.
திருப்பி அனுப்பும் மசோதாக்களை பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பும்போது அவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.அதுபோன்று செய்யாதபட்சத்தில் ஒட்டுமொத்த ஜனநாயக அமைப்புமுறையே தோல்வியுறுகிறது என்று குற்றம்சாட்டியிருந்தது.
அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஆளுநர் எந்த காரணமும் தெரிவிக்காமல் மசோதாக்களை நிறுத்திவைத்துள்ளார். ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின்னர் குடியரசு தலைவருக்கு எப்படி அனுப்பி வைக்க முடியும்? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து முந்தைய வழக்குகளின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்கும் மசோதா என்றால் அது செல்லாது என ஆளுநர் தரப்பு வாதிட்டது. இதற்கு செல்லாத மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு எப்படி அனுப்பி வைக்க முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும், ஆளுநர் மசோதா மீது எடுக்கும் முடிவு குறித்து வெளிப்படையாக ஏன் மாநில அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் வினவியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.
மேலும் இரு தரப்பும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.