ஐபிஎல் டி 20 தொடரின் 18-வது சீசன் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் அதிரடி தொடக்கம் கொடுக்க முயன்றார். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே பில் சால்ட் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விளாசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டன. கைல் ஜேமிசன் வீசிய அடுத்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பில் சால்ட், 4-வது பந்தை விளாச முயன்ற போது மிட் ஆன் திசையில் நின்ற ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் ஆனது. 9 பந்துகளை சந்தித்த பில் சால்ட் 16 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால், விராட் கோலியுடன் இணைந்து சீராக ரன்கள் சேர்த்தார். பவர்பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் சேர்க்கப்பட்டன. நிதானமாக விளையாடிய மயங்க் அகர்வால் 18 பந்துகளில், 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் யுவேந்திர சாஹல் பந்தை டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடித்த போது அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து கேப்டன் ரஜத் பட்டிதார் களமிறங்கினார். யுவேந்திர சாஹல் வீசிய 9-வது ஓவரில் ரஜத் பட்டிதார், லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசினார். இந்த ஓவரில் 11 ரன்கள் சேர்க்கப்பட்டன. 10 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்தது. கைல் ஜேமிசன் வீசிய 11-வது ஓவரின் 3-வது பந்தை மிட் ஆன் திசையில் சிக்ஸருக்கு விளாசிய ரஜத் பட்டிதார் 5-வது பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர், 16 பந்துகளில், ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் யுவேந்திர சாஹல் வீசிய 14-வது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசினார். இதே ஓவரில் விராட் கோலி பவுண்டரி ஒன்றை விரட்டினார். இதனால் இந்த ஓவரில் பெங்களூரு அணிக்கு 14 ரன்கள் கிடைத்தன. நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி 35 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 14.5 ஓவர்களில் 131 ஆக இருந்தது.
இதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்ற லியாம் லிவிங்ஸ்டன் 15 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் கைல் ஜேமிசன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். ஜிதேஷ் சர்மா 10 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் விளாசிய நிலையில் விஜயகுமார் வைஷாக் வீசிய 18-வது ஓவரில் போல்டானார். ஜிதேஷ் சர்மா, லிவிங்ஸ்டன் ஜோடி 12 பந்துகளில் 36 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தது. இதில் கைல் ஜேமிசன் வீசிய 17-வது ஓவரில் மட்டும் 23 ரன்கள் விளாசப்பட்டிருந்தன.
இதன் பின்னர் களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பர்டு, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் வீசிய 19-வது ஓவரின் கடைசி இரு பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசினார். மட்டையை சுழற்ற முயன்ற அவர், 9 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரின் 2-வது பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதே ஓவரில் கிருணல் பாண்டியா (4), புவனேஷ்வர் குமார் (1) ஆகியோரும் நடையைக் கட்டினர். இந்த ஓவரில் அர்ஷ்தீப் சிங் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார். 20 ஓவர்களில் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.
பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். அஸ்மதுல்லா ஒமர்ஸாய், விஜயகுமார் வைஷாக், யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். 191 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன், பிரியன்ஷ் ஆர்யா ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. பிரியன்ஷ் ஆர்யா 19 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது எல்லைக்கோட்டில் பில் சால்ட்டின் அபாரமான கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோஷ் இங்லிஷ் களமிறங்க பவர் பிளேவில் பஞ்சாப் அணி 52 ரன்கள் சேர்த்தது.
பொறுமையாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் 22 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் கிருணல் பாண்டியா பந்தில் பாயின்ட் திசையில் நின்ற புவனேஷ்வர் குமாரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில் ரொமாரியோ ஷெப்பர்டு பந்தை கட் ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் ஆனது.
இதையடுத்து நேஹல் வதேரா களமிறங்கினார். 10 ஓவர்களில் பஞ்சாப் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்தது. கிருணல் பாண்டியா வீசிய அடுத்த ஓவரில் ஜோஷ் இங்லிஷ் டீப் மிட்விக்கெட் திசையில் சிக்ஸர் விளாசினார். தொடர்ந்து ரொமாரியோ ஷெப்பர்டு வீசிய 12-வது ஓவரிலும் லெக் திசையில் சிக்ஸர் ஒன்றை பறக்கவிட்டார் ஜோஷ் இங்லிஷ். அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்லிஷ், கிருணல் பாண்டியா வீசிய 13-வது ஓவரின் முதல் பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸரை நோக்கி விளாசிய போது எல்லைக் கோட்டுக்கு மிக அருகே லியாம் லிவிஸ்டனிடம் கேட்ச் ஆனது.
23 பந்துகளை எதிர்கொண்ட ஜோஷ் இங்லிஷ் 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 39 ரன்கள் சேர்த்தார். அப்போது பஞ்சாப் அணி 98 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் சஷாங் சிங், நேஹல் வதேராவுடன் இணைந்தார். ரொமாரியோ ஷெப்பர்டு வீசிய 15-வது ஓவரில் சஷாங் சிங் பவுண்டரியும், நேஹல் வதேரா சிக்ஸரும் விளாசினர். கடைசி 5 ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 72 ரன்கள் தேவையாக இருந்தன.
ஜோஷ் ஹேசில்வுட் வீசிய 16-வது ஓவரில் சஷாங் சிங் 2 சிக்ஸர்கள் விளாச இந்த ஓவரில் 16 ரன்கள் சேர்க்கப்பட்டன. மறுபுறம் ரன்கள் சேர்க்க தடுமாறிய நேஹல் வதேரா 18 பந்துகளில், ஒரு சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்த நிலையில் புவனேஷ்வர் குமார் வீசிய 16-வது ஓவரின் 2-வது பந்தை டீப் கவர் திசையில் அடித்த போது கிருணல் பாண்டியாவிடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் சந்தித்த முதல் பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்ட நிலையில் அடுத்த பந்தை ஷார்ட்தேர்டு திசையில் யாஷ் தயாளிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த இரு விக்கெட்களும் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின. கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 47 ரன்கள் தேவையாக இருந்தன. யாஷ் தயாள் வீசிய 18-வது ஓவரின் 2-வது பந்தில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் (1) ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. இந்த ஓவரில் யாஷ் தயாள் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் பஞ்சாப் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவையாக இருந்தன.
புவனேஷ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் சஷாங்க் சிங் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாச 13 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஜோஷ் ஹேசில்வுட் வீசிய கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவையாக இருந்தன. இதில் முதல் இரு பந்துகளையும் சஷாங் சிங் வீணடித்தார். இதனால் 4 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலை உருவாக பெங்களூரு அணியின் வெற்றி உறுதியானது. கடைசி 4 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை சஷாங் சிங் விளாசினார். எனினும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.
முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சஷாங் சிங் 30 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், கிருணல் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். யாஷ் தயாள், ஹேசில்வுட், ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.