No menu items!

போராடிய தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது

போராடிய தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது

தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

சென்னை மாநக​ராட்​சி​யின் 5, 6-வது மண்​டலங்​களில் தூய்​மைப் பணிக்​காக ரூ.276 கோடிக்​கான ஒப்​பந்​தத்தை தனி​யாரிடம் ஒப்​படைப்பதை எதிர்த்தும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செயய்க் கோரியும் தூய்​மைப் பணி​யாளர்​கள் 13 நாட்களாக சென்னை மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​பாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்டு வந்​தனர்.

இதனிடையே, ​போ​ராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலையை மறித்து போராடு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது என தெரி​வித்​த உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்​வு, ரிப்​பன் மாளிகை முன்​பாக போராட்​டம் நடத்தி வரும் தூய்​மைப் பணியாளர்​களை உடனடி​யாக அங்​கிருந்து அப்​புறப்​படுத்த போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டது. அதே​நேரம், முறைப்​படி போராட்​டம் நடத்த அனு​மதி கோரி​னால், அதற்கு சட்​டப்​படி பரிசீலித்து போலீ​ஸார் அனு​மதி வழங்க வேண்​டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

கலைந்துபோக மறுப்பு: உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்ட நிலை​யிலும் கலைந்​து​போக மறுத்து தூயமைப் பணியாளர்கள் போராட்​டத்தை தொடர்ந்​தனர். உயர் நீதிமன்​ற உத்​தர​வைத் தொடர்ந்து அமைச்​சர்​கள் கே.என்​.நேரு, பி.கே.சேகர்​பாபு ஆகியோர் தலை​மை​யில், மேயர் ஆர்​.பிரி​யா, துணை மேயர் மு.மகேஷ்கு​மார், நகராட்சி நிர்​வாகத் துறை செயலர் தா.​கார்த்​தி​கேயன், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் ரிப்​பன் மாளி​கை​யில், தூய்​மைப் பணி​யாளர்​கள் தரப்​பினர் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அதில் உரிய முடிவு எட்​டப்​பட​வில்​லை.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் மேயர் பிரியா கூறும்போது, “போராடி வரும் தூய்​மைப் பணி​யாளர்​கள், பணிப் பாது​காப்​பு, ஊதிய பாது​காப்பு ஆகிய கோரிக்​கைகளை முன்​வைக்​கின்​றனர். போராட்ட அமைப்​புடன் பல்​வேறு கட்ட பேச்​சு​வார்த்​தைகள் நடை​பெற்று வந்​தன. அவர்​கள் தரப்​பிலும், மாநகராட்சி தரப்​பிலும் நீதி​மன்​றம் சென்​றனர். பொதுநல வழக்​கில், ‘ரிப்​பன் மாளிகை முன்பு உள்ள பகுதி போராட்​டம் நடத்தக்​கூடிய இடம் இல்​லை. உடனடி​யாக போராட்​டக்​காரர்​களை அப்​புறப்​படுத்​தப்பட வேண்​டும்’ என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தர​விட்​டுள்​ளது. நீதி​மன்ற உத்​தரவை ஏற்று தூய்​மைப் பணி​யாளர்​கள் அனை​வரும் கலைந்து செல்ல வேண்​டும்.

தூய்​மைப் பணி​யாளர்​கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்​குள் பணி​யில் சேர நீதி​மன்​றம் கால அவகாசம் வழங்​கி​யுள்​ளது. எனவே, அனை​வரும் விரை​வில் பணிக்​குத் திரும்ப வேண்​டும். தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு என்​றும் மாநக​ராட்​சி​யில் பணிப் பாது​காப்பு இருக்​கும். போராட்​டம் தொடர்​பாக நீதிமன்றத்​தில் வழக்கு உள்​ளது. அந்த தீர்ப்​பின் அடிப்​படை​யில் மாநக​ராட்சி உரிய நடவடிக்கை எடுக்​கும்” என்​றார்.

தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு சட்ட உதவி வழங்​கிவரும் உழைப்​போர் உரிமை இயக்​கத் தலை​வர் பாரதி கூறும்போது, “எங்​கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஒரு​போதும் கலைந்து போக மாட்​டோம். எங்​கள் நிலைப்​பாட்​டிலிருந்து பின்​வாங்க மாட்​டோம். கைது செய்​தா​லும் பரவாயில்லை.

மக்​களும், அரசி​யல் கட்​சிகளும் கைவிட மாட்​டார்​கள். அருந்​த​தி​யர், ஆதி​தி​ரா​விடர் மக்​களுக்​கான சுதந்​திரத்தை நோக்கி போராடு​வோம். பகத்​ சிங், அம்​பேத்​கர் வழி​யில் தொடர்ந்து போ​ராடு​வோம். எங்​கள் போ​ராட்​டத்தை அரசு ஒரு​போதும் ஒடுக்க முடி​யாது. இந்த விவகாரத்​தில் முதல்​வர்​ உரிய தீர்​வு காண வேண்​டும்”​ என்​று கூறி​னார்​.

போலீஸ் கட்டுப்பாட்டில் ரிப்பன் மாளிகை: அதன்பின், உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் புதன்கிழமை மாலை அறிவுறுத்தினர். அத்துடன், ரிப்பன் மாளிகை பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். அதனால் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு 11.30 மணி அளவில் கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இருந்தவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக 15 அரசுப் பேருந்துகள் மூலம் ராயபுரம், வேளச்சேரி உள்ளிட்ட சென்னை நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருமண கூடங்கள் மற்றும் சமூக நலக்கூடங்களில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.

ஒரு சில பேருந்துகளில் நள்ளிரவு நடு ரோட்டிலேயே தூய்மைப் பணியாளர் இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. வேளச்சேரி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கும்போது தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை அங்கிருந்து காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.

‘போலீஸ் அராஜகம் ஒழிக’, ‘எங்களது போராட்டம் நியாயமானது. அதனால் அறவழியில் இதைத் தொடருவோம்’ என கைது செய்யப்பட்டபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், போலீஸார் கைது நடவடிக்கையின்போது பெண் ஒருவர் மயக்கமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கூடாரங்கள் அகற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ரிப்பன் மாளிகை முன்பு நடைபாதையில் அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன.

மீண்டும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் மேற்கொள்ளாத வகையில், அங்கு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை மாநக​ராட்சியின் பிற மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் அந்தப் பகுதியை சுத்தம் செய்தனர். அங்கிருந்த குப்பைகளை அவர்கள் அகற்றினர்.

தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளரவில் கைது செய்து, வலுக்கட்டயாமாக அப்புறப்படுத்திய சம்பவத்தை அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...