உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதன்படி 124-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.
இதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா விண்வெளி பயணத்தை நிறைவு செய்து அண்மையில் பூமிக்கு திரும்பினார். அவர் தரையைத் தொட்டபோது இந்தியா திருவிழா கோலம் பூண்டது. அனைத்து இந்தியர்களும் வெற்றி கொண்டாடத்தில் திளைத்தனர். ஒட்டுமொத்த தேசமும் பெருமிதத்தில் பொங்கியது.
கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியபோதும் இதே சூழல் காணப்பட்டது. அறிவியல், விண்வெளி ஆராய்ச்சி குறித்து இந்திய சிறார் மனதில் ஆர்வம் துளிர்த்திருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தூண்ட இன்ஸ்பயர்-மானக் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தில் இதுவரை லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் இணைந்துள்ளனர். நாடு முழு வதும் விண்வெளி துறை சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன. வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி தேசிய விண்வெளி தினத்தை அனைவரும் கொண்டாட வேண்டுகிறேன்.
உலகத் தரத்தில் இந்தியாவில் பொருட்களை தயாரிக்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இந்தியர்களின் வியர்வைக்கு மதிப்பளிக்க வேண்டும். இந்திய கலாச்சாரத்தின் மிகப்பெரிய ஆதாரம் நமது பண்டிகைகளும், நமது பாரம்பரியங்களும்தான்.
பல நூற்றாண்டுகளாக ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்டிருக்கும் ஞானம் நமது மிகப்பெரிய சொத்தாகும். இந்த ஓலைச்சுவடிகளில் விஞ்ஞானம் உள்ளது, சிகிச்சை முறைகள் உள்ளன. இசை, தத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.
பாரம்பரிய ஞானத்தை போற்றி பாதுகாப்பது நமது பொறுப்பாகும். தமிழ்நாட்டின் தஞ்சாவூரை சேர்ந்த மணி. மாறன் இந்த பணியில் ஈடுபட்டிருக்கிறார். தமிழில் இருக்கும் ஓலைச்சுவடிகளை இளம்தலைமுறையினர் படித்து கற்றுக் கொள்ளவில்லை என்றால் விலைமதிப்பில்லாத மரபுச் செல்வத்தை நாம் இழக்க நேரிடும் என்று அவர் கருதினார். இதற்காக அவர் மாலைநேர வகுப்புகளை தொடங்கினார்.
தமிழ்ச் சுவடிகளை எவ்வாறு படிப்பது, புரிந்து கொள்வது என்பது குறித்து மணி. மாறன் கற்பித்தார். அவரது வழிகாட்டுதலால் ஏராளமான மாணவர்கள் ஓலைச்சுவடிகளை கற்கும் அறிவில் தேர்ச்சி பெற்று உள்ளனர். இப்படிப்பட்ட முயற்சிகள் நாடு முழுவதும் நடைபெற்றால் நமது பண்டைய ஞானம் நான்கு சுவர்களுக்குள் முடங்கி கிடக்காமல், புதிய தலைமுறையினரை சென்றடையும்.
இந்த சிந்தனையால் உத்வேகம் அடைந்து நடப்பாண்டு மத்திய பட்ஜெட்டில் ‘ஞான பாரத இயக்கம்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. புதிய இயக்கத்தின்படி, பண்டைய சுவடிகள் டிஜிட்டல்மயமாக்கப்படும். ஒரு தேசிய டிஜிட்டல் சேமிப்பகம் உருவாக்கப்படும். இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆய்வாளர்கள் இந்தியாவின் ஞான பாரம்பரியத்தோடு தங்களை இணைத்துக் கொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
இந்தியாவின் ஆன்மா செஞ்சி கோட்டை: மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் 12 கோட்டை களை, உலக மரபுச் சின்னங்களாக யுனெஸ்கோ அங்கீரித்து உள்ளது. இவற்றில் 11 கோட்டைகள் மகாராஷ்டிராவிலும், செஞ்சி கோட்டை தமிழ்நாட்டிலும் உள்ளது.