உலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்து விட்டதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் அறிவித்துள்ளது இந்தியர்கள் ஒவ்வொருவரும் பெருமைப்படக் கூடிய விஷயமாக அமைந்துள்ளது. அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா என்ற வரிசையில் ஜப்பானின் பொருளாதாரத்தை இந்தியா முந்திவிட்டதால் நான்காம் இடத்திற்குவந்துவிட்டதாக உலகப் பொருளாதார நிதி நிறுவனத்தின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, இதே 6 சதவீத வளர்ச்சி தொடரும் நிலையில் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் ஜெர்மனியையும் முந்திச் சென்று மூன்றாவது பெரியபொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா வளர்ந்துவிடும் என்றும் அறிவித்திருப்பது இந்தியர்களை தலைநிமிரச் செய்யும் அறிவிப்பாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் காலகட்டத்தில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மூலம் இத்தகைய சாதனை நடந்து வருவது பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.
ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி விகிதம் இந்தியாவை விட மிகக் குறைவு என்பதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் 3-ம் இடத்தைப் பிடிப்பதும் எளிய இலக்காகவே அமைந்துள்ளது. ஆனால், உலகில் பொருளாதார வல்லரசாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் கனவு நனவாக இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. முதலிடத்தில் உள்ள அமெரிக்கா நம்மை விட 8 மடங்கும், சீனா 5 மடங்கும் பெரிய பொருளாதாரமாக இருப்பதால் அந்தநாடுகளை முந்திச் செல்ல இந்தியா இன்னும் வேகமான வளர்ச்சியை பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் சாதனைக்குரியதாக கருதப்பட்டாலும், இந்த வளர்ச்சி இந்திய குடும்பங்களிலும், தனிநபர் வருமானத்திலும் எதிரொலித்துள்ளதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. இந்திய மக்கள்தொகையில் 120 கோடி பேர் குறைந்த வருவாய் பிரிவிலும், 6.6 கோடி பேர் நடுத்தர வருவாய் பிரிவிலும், 1.6 கோடி பேர் உயர் நடுத்தர வருவாய் பிரிவிலும், 20 லட்சம் பேர் மட்டுமே உயர் வருவாய் பிரிவிலும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி தனிநபர் வருவாயிலும் எதிரொலித்தால் மட்டுமே அது உண்மையான வளர்ச்சியாக கருதப்படும். தனிநபர் வருவாயைப் பொறுத்தமட்டில், 181 நாடுகள் பட்டியலில் இந்தியா 122-வது இடத்திலேயே உள்ளது. இதுகுறித்து பொருளாதார வல்லுநர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மக்களிடம் பிரதிபலிப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ப கொள்கை முடிவுகளை வகுக்க வேண்டும்.