No menu items!

ஹிண்டன்பர்க் புகார் – சரியும் அதானி பங்குகள்!

ஹிண்டன்பர்க் புகார் – சரியும் அதானி பங்குகள்!

அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதாக அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் தனிநபர் ஆவணங்களை மேற்கோளிட்டுத் தெரிவித்துள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை சொல்வது என்ன?

அமெரிக்காவின் பிரபல ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச்,  அதானி குழுமத்திற்கு எதிராக ஜனவரி 2023இல் வெளியிட்ட அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது. அதானி குழுமம் முறைகேடான வகையில் தனது நிறுவனத்தின் பங்குகளின் விலையை உயர்த்துவது குறித்து பல குற்றச்சாட்டுகளை அடுக்கி வெளியிட்ட அந்த  அறிக்கையின் வாயிலாக அதானி சாம்ராஜ்ஜியத்தின் மொத்த சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு கீழ் சரிந்தது. இந்நிலையில், 18 மாதங்களுக்குப் பிறகு தற்போது அதானி குழுமத்திற்கு எதிராக தனது இரண்டாவது அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது.

“அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களின் நிதி தொடர்பான தகவல்கள் மிகவும் தெளிவற்றதாகவும் சிக்கலான கட்டமைப்புகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. ஆனாலும், இந்தியா இன்ஃபோலைனின் ‘இ.எம். ரீசர்ஜண்ட் ஃபண்ட் மற்றும் இந்தியா ஃபோக்கஸ் ஃபண்ட்’ நிறுவனம் மூலம் இயக்கப்படும் அதானியின் சந்தேகத்திற்குரிய மற்ற பங்குதாரர் நிறுவனங்களுக்கு எதிராக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (செபி) இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குக் காரணம், அதானி குழுமத்தின் நிதி முறைகேடுகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை வைத்துள்ளதுதான்.

ஹிண்டன்பர்க் பெற்ற ஆவணங்களின்படி, செபி தலைவராக மாதபி நியமிக்கப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, மொரீஷியஸை சேர்ந்த நிதி நிர்வாக நிறுவனமான ட்ரைடென்ட் டிரஸ்டுக்கு, ‘குளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட்’இல் தானும் தனது மனைவி செய்துள்ள முதலீடுகள் தொடர்பாக தவல் புச் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்” என்று ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், “செபி தலைவர் தனிப்பட்ட ஆதாயத்திற்காக இவ்வாறு செயல்பட்டுள்ளதால், செபியின் வெளிப்படைத்தன்மை கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

அதானி பங்குகள் கடும் சரிவு!

ஹிண்டன்பெர்க் 2023 அறிக்கையின் மூலம் அதானி குழுமத்திற்கு சுமார் 100 பில்லியன் டாலர் வரையிலான இழப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தற்போதைய அறிக்கை எந்த அளவுக்கு மோசமாகப் பாதிக்கும் என்பது குறித்து முதலீட்டாளர்கள் மிகவும் அச்சத்துடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்னர்.

முதலீட்டாளர்கள் அச்சப்பட்டது போலவே அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தது. அதானி குழுமத்தின் பங்கு முதலீட்டாளர்கள் சுமார் ரூ.56,000 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளனர். இதனால், அதானி குழுமத்தின் மொத்த சந்தை மதிப்பீடு ரூ. 16.7 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.

இந்த விஷயத்தில் செபி தனது தரப்பு விளக்க அறிக்கையை அளித்துள்ளது. அதில், “ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், அதானி குழுமத்திற்கு எதிராக கூறிய குற்றச்சாட்டுகள், செபியால் முறையாக விசாரிக்கப்பட்டன. இந்தக் கூற்றுகள் பொருத்தமற்றவை.

செபி சொல்வது என்ன?

சுய பிரதிபலன்கள் சார்ந்து செய்யப்படும் செயல்களை விசாரிக்க செபியிடம் முறையான வழிமுறைகள் உள்ளன. பத்திரங்களின் கையிருப்பு மற்றும் அவற்றின் இடமாற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேவையான, பொருத்தமான, வெளிப்படையான அறிக்கைகள் செபி தலைவரால் அவ்வப்போது செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சாத்தியமான முரண்பாடுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலைவரும் தன்னைத் தானே விலக்கிக் கொண்டார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் அமைதியாக இருக்கவும், ஹிண்டன்பர்க் அறிக்கை போன்ற அறிக்கைகளுக்கு எதிர்வினையாற்றும் முன் சரியான புரிதலைப் பின்பற்ற வேண்டும் என்றும் செபி கேட்டுக்கொண்டுள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட செபி தலைவர் என்ன சொல்கிறார்?

செபி தலைவர் மாதபி புச், அவருடைய கணவர் தவல் புச் ஆகியோர் கூட்டாக ஒரு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “எங்களுடைய வாழ்க்கை மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் திறந்த புத்தகம் போன்றவை. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து தேவையான தகவல்களும் செபியிடம் அளிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தனிநபர்களாக இருந்தபோது உள்ள ஆவணங்கள் உட்பட மேலும் தேவைப்படும் நிதி ஆவணங்களை வெளிப்படுத்துவதற்கு எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மைக்காக, உரிய நேரத்தில் இதுகுறித்து விரிவான அறிக்கை வெளியிடப்படும்.

ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிதியில் செய்யப்பட்ட முதலீடு 2015-இல் நாங்கள் இருவரும் சிங்கப்பூர் குடிமக்களாக இருந்தபோது செய்யப்பட்டது. மாதபி செபியின் முழு நேர உறுப்பினராகச் சேருவதற்கு கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த முதலீடு செய்யப்பட்டது.

தலைமை முதலீட்டு அதிகாரியான அனில் அஹுஜா, பள்ளி மற்றும் ஐஐடி டெல்லி காலத்திலிருந்தே தவலின் நண்பர் என்பதாலும், சிட்டி பேங்க், ஜேபி மோர்கன், மற்றும் 3ஐ குரூப் பிஎல்சி ஆகியவற்றின் முன்னாள் ஊழியர் என்பதாலும், பல தசாப்தங்களாக வலுவான முதலீட்டுத் தொழிலைக் கொண்டிருந்ததாலும் இந்த நிதியில் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

அனில் அஹுஜா உறுதிப்படுத்தியபடி, எந்தவொரு அதானி குழும நிறுவனத்தின் எந்தவொரு பத்திரம், பங்கு, அல்லது டெரிவேட்டிவ் ஆகியவற்றில் எந்த நேரத்திலும் நிதி முதலீடு செய்யவில்லை.

2019-ஆம் ஆண்டு தவல், பிளாக்ஸ்டோன் தனிநபர் ஈக்விட்டி நிறுவனத்துக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இது மாதபி செபியின் தலைவராகும் முன்பு நடந்தது. அதன்பின் இந்த நிறுவனத்தின் மீது முடிவெடுக்கும் உரிமை மாதபிக்கு இல்லை என செபியின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது.

செபியின் அத்தனை விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் பல விதிமீறல்களுக்காக விளக்கம் கேட்கப்பட்டிருக்கும் ஹிண்டன்பர்க், செபி மீதும் அதன் தலைவர் மீதும் அவதூறு பரப்புகிறது. செபி அமைப்பு ஹிண்டன்பர்க் ஆராய்ச்சிக்கு எதிராக அமலாக்க நடவடிக்கை எடுத்தது. நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியது. அதற்குப் பதிலாக, ஹிண்டன்பர்க் செபியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயன்றுள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதானி குழுமமும் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ளது. அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அவை ஏற்கெனவே விசாரிக்கப்பட்டுவிட்டன என்றும் கூறியுள்ளது.

பாஜக சொல்வது என்ன?

ஹிண்டன்பர்க்கின் புதிய அறிக்கை வெளியான பின்னர், காங்கிரஸ், “அதானியின் பெரும் ஊழலின் அளவு குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த 2022ஆம் ஆண்டு மாதபி புச் செபி தலைவரான உடனேயே, அவரை கௌதம் அதானி சந்தித்தது குறித்த கேள்விகளை இது எழுப்புகிறது. அந்த நேரத்தில் அதானி நிறுவனத்தின் பரிமாற்றங்கள் தொடர்பாக செபி விசாரித்து வந்தது நினைவிருக்கலாம்” எனப் பதிவிட்டுள்ளார்.

செபி தலைவர் மாதபி புச் பதவி விலக வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நிலுவையிலுள்ள விசாரணையைக் கருத்தில் கொண்டு, செபி தலைவரை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். அவரும் அவரது கணவரும் நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தடுக்க அனைத்து விமான நிலையங்களிலும், இன்டர்போலிலும் லுக்-அவுட் நோட்டீஸ் வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

பாஜக செய்தித்தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி, “இந்தியாவில் ஒழுங்கின்மை மற்றும் உறுதியற்ற தன்மையை, குறிப்பாக பொருளாதார ஸ்திரமின்மையை உருவாக்க விரும்புகிறவர்கள் சதி இது என்பது தெளிவாக தெரிகிறது. கடந்த பல ஆண்டுகளாக நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தொடர் நடைபெறும் சமயங்களில் தான் இத்தகைய அறிக்கைகள் வெளியிடப்படும். கடந்தமுறை அதானி குழுமம் குறித்த ஹிண்டன்பர்க் அறிக்கை 2023-ல் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு சில தினங்கள் முன்னதாக வெளியானது” என கூறியுள்ளார்.

ஆனால், ஹிண்டன்பர்க்கின் தற்போதைய அறிக்கை கூட்டத்தொடர் முடிந்தபின்னர் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...