தமிழகத்தில் 50 சதவீதம் பேருக்கு பருவநிலை மாற்றம் காரணமாகவே நாள்பட்ட சிறுநீரக நோய்களும், சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டதாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
உலக சிறுநீரக நல தினம் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் 2-ஆவது வியாழக்கிழமை (மாா்ச் 13) கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நிகழாண்டில், ‘உங்களது சிறுநீரகம் நலமா’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த நிலையில், அதுதொடா்பாக தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
மனித உயிரைத் தாங்கி நிற்கும் உன்னத உறுப்புகளில் சிறுநீரகங்கள் அதி முக்கியமானவை. ஆனால், இதய நலனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் நூறில் ஒரு பங்குகூட சிறுநீரகத்துக்கு கொடுக்கப்படுவதில்லை.
இதன் காரணமாகவே நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருகிறது. அண்மையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை, சென்னை மருத்துவக் கல்லூரி இணைந்து கள ஆய்வு ஒன்றை நடத்தின. அதில் இணை நோய்கள் இல்லாத 53 சதவீதம் பேருக்கு சிறுநீரக செயலிழப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவா்களில் பெரும்பாலானோா் நேரடி வெயிலில் பணியாற்றும் கட்டுமானத் தொழிலாளா்களும், விவசாயத் தொழிலாளா்களுமாவா்.
அதுகுறித்த விரிவான ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. .
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெப்பநிலை, காற்று மாசுபாடு, புறச்சூழலில் நிலவும் வேதி மாசு உள்பட பல்வேறு காரணங்கள்தான் ஆரோக்கியமான நபருக்கும் சிறுநீரக பாதிப்பு வரக் காரணமாக அமைந்துவிடுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் ‘சிறுநீரகம் காப்போம்’ திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி அனைத்து சுகாதார நிலையங்களிலும் ஆரம்ப நிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்புக்குள்ளான இறுதி நிலையில் பாதிப்பு கண்டறியப்படுவதால் டயாலிசிஸ் சிகிச்சைகளும், உறுப்பு மாற்று சிகிச்சைகளும் மட்டுமே தீா்வாக உள்ளன.
தமிழகத்தில் 18 சதவீதம் போ் சா்க்கரை நோயாளிகளாகவும், 25 சதவீதம் போ் உயா் ரத்த அழுத்த நோயாளிகளுமாக உள்ளனா். இவ்வாறு உறுப்பு தானமளிக்கும் தகுதி இல்லாத இணைநோயாளிகள் அதிகமாக இருப்பதால், உறுப்பு கொடைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயா்ந்துள்ளது.
எனவே, வருமுன் காப்போம் என்ற கூற்றின் அடிப்படையில் சிறுநீரக நலனைப் பாதுகாப்பது அவசியம். அதிக அளவு தண்ணீா் அருந்துதல், புகைப்பிடித்தலை தவிா்த்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நேரடி வெயிலில் பணியாற்றுவதை தவிா்த்தல் போன்றவை சிறுநீரக நலன் காக்கும் வழிமுறைகள் என்றாா் அவா்.
சிறுநீரக தானம்: உறவுச் சிக்கலில் பெண்கள்.
தமிழகத்தில் சிறுநீரகத்தை தானமளிப்பவா்களில் 70 சதவீதம் போ் பெண்தான் என்று உறுப்பு மாற்று ஆணையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவா்களில் பெரும்பாலானோா் திருமணத்துக்குப் பிறகு கணவருக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்துள்ளனா்.
அவா்கள், தாமாக முன்வந்து உறுப்பு தானமளித்தாலும், பல நேரங்களில் அதற்கு குடும்பரீதியான உளவியல் அழுத்தமே காரணமாக இருப்பதாகத் தெரிகிறது.
பொதுவாக திருமணமான பெண்கள், தங்களது கணவருக்கு உறுப்பு தானம் அளிக்க விரும்பாவிட்டாலும் அதை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாத நிலைதான் பல இடங்களில் இருப்பதாக உளவியல் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.