மகேஷ்பாபு கதாநாயகனாக நடிக்கும் ‘வாரணாசி’ படத்தை இயக்கி வருகிறார், ராஜமவுலி. இதில் பிரியங்கா சோப்ரா நாயகியாகவும் பிருத்விராஜ் வில்லனாகவும் நடிக்கின்றனர். 2027-ம் ஆண்டு ஏப்.7-ல் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் கென்யாவில் நடைபெற்றது.
இந்நிலையில் அங்கு நடந்த படப்பிடிப்பு அனுபவங்களை நடிகை பிரியங்கா சோப்ரா பகிர்ந்துள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டி யில், “‘வாரணாசி’ படத்துக்காகக் கென்யாவில் படப்பிடிப்பில் இருந்தேன். அங்கு நாங்கள் காட்டெருமைகளுக்கு நடுவில் நின்று படப்பிடிப்பு நடத்தினோம்.
அவை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வலசை போகும் நேரத்தில், அவற்றின் கூட்டத்துக்கு நடுவிலேயே நானும் சக நடிகர் மகேஷ் பாபுவும் நின்றிருந்தோம். நான் பார்த்ததிலேயே மிகவும் சிறந்த விஷயம் அதுதான். அவற்றின் முகங்களைப் பார்க்கும்போதும், எத்தனை ஆண்டுகளாக அவற்றின் இனங்கள் இங்கே வாழ்ந்து வருகின்றன என்பதை நினைக்கும்போதும் ஒரு விதமான பிரம்மாண்டத்தை உணர முடிந்தது.
காட்டில் இந்த விலங்குகளை நேரில் பார்க்கும்போது அந்த இடத்தின் ஆழமான கனத்தை உணர முடியும். இது உண்மையிலேயே ஓர் இனிமையான அனுபவம்” என்று அவர் கூறினார். இந்தப் படப்பிடிப்பு பற்றி மகேஷ் பாபு ஏற்கெனவே கூறியிருந்தார்.



