No menu items!

ஈரானுக்கு ட்ரம்ப் 48 மணி நேர கெடு

ஈரானுக்கு ட்ரம்ப் 48 மணி நேர கெடு

‘‘ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை நாளை காலைக்குள் முழுமையாக திறக்காவிட்டால், ஈரானின் மின் நிலையங்களைத் தகர்ப்போம்’’ என்று ட்ரம்ப் எச்சரிக்கை

‘‘அமெரிக்கா தாக்கினால் அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க மையங்கள் மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும்’’ என்று ஈரானும் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த மாதம் கெடு விதித்திருந்தார். அதற்கு ஈரான் சம்மதிக்காததால், அந்நாட்டின் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் கடந்த மாதம் 28-ம் தேதி போர் தொடுத்தன. இதில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளைக் குறி வைத்து ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது.

இதனால் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் முடங்கின. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் பல கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்திய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் 8,000 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின.

கடந்த 23 நாட்களாக நடைபெற்று வரும் போரில், ஈரானின் ராணுவ தளங்கள், எண்ணெய் வயல்கள், அணுசக்தி மையங்கள், ஏவுகணை தளங்கள் ஆகியவை கடுமையாக சேதம் அடைந்தன. ஈரானின் முக்கிய தலைவர்கள் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஆனாலும், ஈரான் அரசு அமெரிக்காவிடம் சரண் அடையாமல், தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதி ஈரானை ஒட்டியுள்ளதால், எதிரி நாடுகளின் எண்ணெய் கப்பல்களை ஈரான் தாக்குகிறது. உலகளவில் 5-ல் ஒரு பங்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கொண்டு செல்லப்படுவதால், இங்கு பாதுகாப்பை ஏற்படுத்தி, சுதந்திரமான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புகிறார்.

இதற்கு நேட்டோ நாடுகள் உதவ வேண்டும் என்றும் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், நேட்டோ நாடுகள் அதற்கு முன்வரவில்லை. இதனால் நேட்டோ நாடுகள் மீதும் ட்ரம்ப் கோபத்தில் உள்ளார். இதையடுத்து அமெரிக்க கடற்படையின் மேலும் 3 போர்க் கப்பல்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்ப அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் காஸ் விநியோக மையமாகத் திகழும் கார்க் தீவை கைப்பற்றி ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா வியூகம் வகுத்து வருகிறது.

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியை, எந்த அச்சுறுத்தலுமின்றி முழுமையாக ஈரான் திறந்து விட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 48 மணி நேர கெடு விதித்துள்ளார். இதுகுறித்து, தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் அதிபர் ட்ரம்ப் நேற்று வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது: ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலும் இன்றி, நாளை காலைக்குள் ஈரான் முழுமையாகத் திறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால், ஈரானின் பல்வேறு மின் நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும். மிகப்பெரிய மின் நிலையத்தின் மீதே முதலில் தாக்குதல் நடத்தப்படும்.இவ்வாறு அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கு ஈரான் பதிலடி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கைக்கு ஈரான் ராணுவமும் நேற்று பதிலுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஈரான் ராணுவம் கூறுகையில், ‘‘ஈரான் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள், தகவல் தொழில்நுட்பம், கடல்நீரை குடிநீராக்கும் மையங்கள், எரிசக்தி நிலையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்.

அத்துடன் ஈரானின் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்தும். மேலும் எதிரி நாடுகளை தவிர மற்றவர்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் எந்த அச்சுறுத்தலும் இருக்காது’’ என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, ஈரான் தாக்குதலால் வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் வளைகுடா நாடுகள் கடுமையாகப் பாதிக்கும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...