காலகாலமாக நாம் படித்து வரும் திருக்குறளை காலத்திற்கும் மறக்கால் இருக்க அதை திரைப்படமாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் பாலகிருஷ்ணன். வள்ளுவரின் காலத்தில் இதெல்லாம் நடந்திருக்கூடும் என்று ஆய்ந்தறிந்து அதற்கு ஒரு திரைக்கதை வடிவம் கொடுத்து சமகாலத்தில் வள்ளுவர் எதையெல்லாம் சந்தித்திருப்பார் என்று உணர்ந்து அதை புனைவோடு சொல்லியிருப்பது அழகாக இருக்கிறது.
வள்ளுவர் வாசுகியோடு வள்ளுவ நாட்டில் வாழ்ந்து வருகிறார். அந்த நேரத்தில் முப்பால் என்ற அடையாளத்தோடு திருக்குறளை எழுத ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு படியெடுக்கும் பொறுப்பை தான் எடுத்துக்கொண்ட வாசுகி கணவருக்கு பணி செய்து வருகிறார்.
தன் மாணவன் காதல், மன்னன் குமணன் தமிழுக்காக தன் தலையையே கொடுக்க துணியும் சம்பவம், வீரனின் களப்பலிம் அரசனின் போர் உத்தி என குறளில் நாம் படித்ததை காட்சியிருப்பதும், அதை வள்ளுவர் வழியே சொல்வதும் படத்தை ஆர்வத்துடன் நோக்க வைக்கிறது.
படத்தில் வள்ளுவராக கலைச்சோழன் என்பவர் நடித்திருக்கிறார். நல்ல நேர்த்தியான நடிப்பு.
பொருத்தமான முகம். பள்ளிக்கூட புத்தக்க அட்டையில் பார்த்த அதே திருவள்ளுவர். பாந்தமான அவரது நடை உடை கதாபாத்திரத்தின் தூய்மையை வெளிப்படுத்துகிறது. வாசுகியாக தனலெட்சுமி நடித்திருக்கிறார். நல்ல களையான முகத்தை ஒப்பனையால் மறைத்திருக்கிறார்கள். இயல்பான உடல்மொழி ரசிக்க வைக்கிறார்.
புலவர் பெருத்தச்சன் பாத்திரத்தில் கொட்டாச்சி சில காட்சிகளில் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். நீண்ட காலமாக இருந்த திருக்குறளை பற்றிய சந்தேகமாக இருந்த சம்பவத்தை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அருமை. மதுரை தமிழ்ச்சங்கத்தில் குறளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நக்கீரர் நிராகரித்த காட்சி பிரமிப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது.
பாண்டிய மன்னராக ஓ.ஏ.கே. சுந்தர், நக்கீரர் வேடத்தில் சுப்ரமணிய சிவா ஆகீயோர் கொண்ட சபையில் வள்ளுவர் வாதம் செயுவதும் குறளை இயற்றுவதும் சிறப்பான இடம். அதே காட்சி கன்னியாகுமரி வள்ளுவர் சிலையில் வந்து நிறைவடையும் போது நம்மையறியாமல் கைதட்ட தோன்றுகிறது. இயக்குனர் பாலகிருஷ்ணன் பாராட்டப்பட வேண்டியவர். அவருக்கு திருக்குறளும் ஒரு அடையாளமாக மாறும். உலகப்பொதுமறையை படமாக்க எளிய வழியை கண்டுபிடித்ததற்கே இயக்குனருக்கு அவார்டு கொடுக்கலாம்.
இளையராஜாவின் பின்னணி இசை கற்பனைக் காட்சியை நிஜமாக்கியிருக்கிறது. பாடல் இதம். எட்வின் ஒளிப்பதிவு தரமாக இருந்தது. வீரன் பரிதியாக குணாபாபு, அவரது காதலியாக பாடினி குமார், மன்னன குமணனாக அரவிந்த ஆண்டவர் தங்கள் பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
சிறப்பு: ஒரு இடத்தில் வள்ளுவரே திருக்குறளை ஆளாளுக்கு தங்கள் விருப்பம் போல புரிந்து கொண்டு எனக்கு என்னென்ன சாயம் பூசப்போகிறார்களோ என்று சொல்வது சமகால அரசியலை பிரதிபலிக்கிறது.