ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் இங்கிலாந்தின் லண்டனுக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், மொத்தமாக 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
பிரிட்டன் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்திற்கான நாடாளுமன்ற துணைச் செயலர் கேத்தரின் வெஸ்ட் எம்.பி.யை சந்தித்தார். இருவரும் தமிழ்நாடு – பிரிட்டன் இடையேயான கூட்டாண்மை உறவுகள் குறித்து விவாதித்தனர்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், லண்டனில், தமிழ்நாடு-இங்கிலாந்து இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்த இங்கிலாந்து அமைச்சர் திருமிகு கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்தேன்.
பசுமைப் பொருளாதாரம், கல்வி, ஆராய்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் கடல்வழி போக்குவரத்து ஆகியவைப் பற்றி நாங்கள் விவாதித்தோம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் தமிழ்நாட்டின் திறன்களை எடுத்துரைத்தேன்.