உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. ரத்த புற்றுநோய் பாதிப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.
மதுரையை சேர்ந்தவர் ஷிஹான் ஹுசைனி. கராத்தே மாஸ்டரான இவர் பல படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான இவர், நடிகர் விஜய் நடித்த ‘பத்ரி’ படத்தில் அவருக்கு கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து பலருக்கும் வில்வித்தை பயிற்சியும் அளித்துள்ளார். அந்தவகையில் இதுவரை 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து, தமிழகத்தில் நவீன வில்வித்தைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
தமிழகத்தில் வில்வித்தையில், ‘ரீகர்வ் வில் (1979)’, ‘காம்பவுண்ட் வில் (1980)’ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியவரும் ஷிஹான் ஹுசைனி தான். அண்மையில் ரத்த புற்றுநோய் பாதிப்பால் தன் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக ஊடகங்களின் வாயிலாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.