கத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மோடி, ஜம்முவையும் ஸ்ரீநகரையும் இணைக்கும் உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்துவைத்தார். தொடர்ந்து், நாட்டின் முதலாவது கம்பி வட அன்ஜி ரயில் பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு – காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, ரயில்வே கட்டுமானங்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட பணிகளை இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்கவுள்ளார்.
இந்த நிகழ்வில் ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளதால், ராணுவம், துணை ராணுவம், காவல்துறை, உளவுத் துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.
ஜம்மு – ஸ்ரீநகர் வழித்தடத்தின் சிறப்புகள்
காஷ்மீா் பகுதிக்கு நேரடி ரயில் போக்குவரத்தை அளிக்கும் 272 கி.மீ. தொலைவு கொண்ட உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட திட்டம் கடந்த 1997-இல் தொடங்கப்பட்டது. இதில் 209 கி.மீ. தொலைவு வழித்தடம் பல்வேறு கட்டங்களாக திறக்கப்பட்டது.
இறுதியாக, சங்கல்தன்-ரியாசி இடையிலான 46 கி.மீ. வழித்தடம் கடந்த ஆண்டு ஜூனிலும், ரியாசி-கத்ரா இடையிலான 17 கி.மீ. வழித்தடம் கடந்த ஆண்டு டிசம்பரிலும் நிறைவடைந்தது.
ரூ.43,780 கோடி செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த வழித்தடத்தில் 36 சுரங்கங்களும் (119 கி.மீ. தொலைவு), 943 பாலங்களும் அமைந்துள்ளன. இதில் 12.77 கி.மீ. தொலைவுள்ள டி-50 சுரங்கம், நாட்டிலேயே மிகப் பெரிய ரயில் சுரங்கம் என்ற சிறப்புக்குரியதாகும்.
இந்த வழித்தடத்தில் நாட்டின் நவீன பொறியியல் அதிசயங்களாக விளங்கும் செனாப் பாலம் (உலகின் உயரமான ரயில் பாலம்), அன்ஜி பாலம் ( நாட்டின் முதலாவது கம்பி வட ரயில் பாலம்) ஆகியவை உள்ளது.
உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தட நீளம்: 272 கி.மீ.
திட்ட மதிப்பு: ரூ.43,780 கோடி
சுரங்கங்கள்: 36 (119 கி.மீ. )
பாலங்கள்: 943
செனாப் பாலம்: 359 மீட்டா் உயரம், 1,315 மீட்டா் நீளம்.
செனாப் பாலத்தின் சிறப்புகள்
1.31 கி.மீ., நீளமுள்ள செனாப் பாலம் திட்டத்திற்குக் கடந்த 2003ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் கட்டுமானத்தை முடிக்கவே 20 ஆண்டுகள் ஆகியுள்ளது. தாமதம் ஆனாலும் கூட பல காரணங்களுக்காகச் சிறப்பு வாய்ந்ததாகவே இந்த செனாப் பாலம் இருக்கிறது.
ரூ.1,486 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இது, உலகின் மிக உயரமான ரயில்வே பாலமாகும். இது 28,660 மெட்ரிக் டன் எஃகால் ஆனது. இது காஷ்மீர் குளிரைத் தாங்கும் வகையில் பூஜ்ஜிய டிகிரிக்கும் குறைவான வெப்பநிலையையும் உறுதியாக இருக்கும்படி கட்டப்பட்டுள்ளது. மேலும், இது 40 டிகிரி வரையிலான வெப்பத்தையும் தாங்கும் திறன் கொண்டது.
359 மீட்டர் உயரத்தில் உள்ள இது, பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானது. குதுப்மினாரை விட ஐந்து மடங்கு உயரமானது. இந்தியாவின் ரயில்வே துறை சமீப காலங்களில் எதிர்கொண்ட மிகப் பெரிய இன்ஜினியரிங் சவால் என்று அரசு இதை குறிப்பிடுகிறது.
இப்பகுதியின் கடினமான நிலப்பரப்பு தான் இந்த பாலத்தின் கட்டுமானத்தில் இருந்த மிகப்பெரிய சவாலாகும். இமயமலைப் பகுதியில் பெரிய இயந்திரங்கள் மற்றும் பிற கட்டுமான உபகரணங்களைக் கொண்டு செல்வது என்பது மிகவும் கடினமான பணி.
இந்த பாலம் மணிக்கு 266 கி.மீ., வேகத்தில் வீசும் காற்று மற்றும் அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கங்களையும் தாங்கும் திறன் கொண்டது. ரயில் போக்குவரத்துக்கு ஏற்றதாகவும், மோசமான வானிலையைத் தாங்கும் வகையிலும் இருப்பதை உறுதி செய்யவே பல ஆண்டு ஆய்வு தேவைப்பட்டுள்ளது.