No menu items!

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – 1000 பேர் பலி

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம் – 1000 பேர் பலி

மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்திய அரசு ‘ஆபரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. உணவு, கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான பொருட்களை இந்திய விமானப் படையின் C130J விமானம் மூலம் மியான்மருக்கு கொண்டு சேர்த்துள்ளது.

பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு: இதற்கிடையில், மியான்மரின் ராணுவ ஆட்சித் தலைவரான மின் ஆங் ஹ்ளெய்ங்கிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினார். இது குறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்த பதிவில், “மியான்மர் ராணுவத் தலைவர் சீனியர் ஜெனரல் மின் ஆங் ஹ்ளெய்ங்குடன் பேசினேன். பூகம்பத்தால் ஏற்பட்ட உயிரிழிப்புகளுக்காக ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டேன். மியான்மரின் நட்பு தேசம், அண்டை நாடு என்ற வகையில் இந்தக் கடினமான நேரத்தில் இந்தியா மியான்மர் மக்களுடன் தோளோடு தோள் நிற்கும் என்று உறுதியளித்தேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே நேற்று (மார்ச் 28) காலை 11.50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.

அடுத்தடுத்து அதிர்வுகள் ஏற்பட்டதால், மியான்மரின் மண்டலே நகரில் உள்ள மசூதிகள், வீடுகள் இடிந்து விழுந்தன. இங்குள்ள பழமையான அரண்மனையும் இடிந்து விழுந்தது. இந்நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்தில் பாதிப்பு: மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் தென்கிழக்கு ஆசிய பகுதியில் உள்ள தாய்லாந்து, மலேசியா, வங்கதேசம், லாவோஸ், சீனா மட்டுமின்றி, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. இதை அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் புவியியல் ஆய்வு அமைப்புகள் உறுதி செய்தன.

தாய்லாந்தில் இதுவரை 10 பேரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாங்காக் நகரின் அடுக்குமாடி கட்டிடம் கட்டுமானப் பணியிடத்தில் 100-க்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

பாங்காக் சுற்றுலா சென்றிருந்த இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவர்கள் தங்களின் திகில் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...