ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சயீத் அலி கமேனியின் ஆலோசகர் எப்படி அமெரிக்காவை தாக்குவது என்று முக்கியமான ஆலோசனையை அவர் கமேனிக்கு வழங்கி உள்ளார்.
அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடவும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கருத்துக்கள் பிராந்தியத்தில் பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகரான ஹோசைன் டலிர்யன், அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவரது இந்த கருத்துக்கள் ஈரானிய ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும் இது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹோசைன் டலிர்யன், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதற்கான அழைப்பையும் விடுத்துள்ளார். இது உலகின் முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகும். இந்த ஜலசந்தி மூடப்பட்டால் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த கருத்துக்கள் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போயுள்ள நிலையில் இந்த கருத்துக்கள் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கலாம்.
ஈரானின் உச்ச தலைவரின் ஆலோசகரின் இத்தகைய கருத்துக்கள் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச சமூகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி என்பது மத்திய கிழக்கு வளைகுடாவை ஓமன் வளைகுடா மற்றும் அரேபிய கடலுடன் இணைக்கும் ஒரு குறுகிய நீர்வழி ஆகும். இதன் குறுகலான இடத்தில், ஜலசந்தி சுமார் 21 மைல்கள் அகலம் கொண்டது, மேலும் இரண்டு திசைகளிலும் இரண்டு மைல்கள் அகலமுள்ள இரண்டு கப்பல் பாதைகள் உள்ளன. உலகின் மிக முக்கியமான ஜலசந்தி இதுதான்.
ஏனென்றால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 26 சதவீதத்தை இந்த ஜலசந்தி கையாளுகிறது, இது உலகின் மிக முக்கியமான கடல்வழி பாதைகளில் ஒன்றாகும். இந்த ஜலசந்தியில் ஏற்படும் எந்தவொரு தடங்கலும் உலக எண்ணெய் சந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பாதை தடுக்கப்பட்டால் உலகின் பொருளாதாரம் ஒரு சில வாரங்களில் பாதாளத்திற்கு செல்லும்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூட முடியும் என்று ஈரான் நீண்ட காலமாக கூறி வருகிறது. இந்த ஜலசந்தியை ஒரு சாலையை மூடுவது போல் மூட முடியாது. ஆனால் வணிகப் போக்குவரத்துக்கு ஆபத்தானதாக மாற்றி, உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீர்குலைக்க ஈரான் முயற்சி செய்யலாம். இங்கே இரண்டு ஏவுகணைகளை ஏவினால் போதும்.. போக்குவரத்து சீர்குலையும்.
1980 களில் ஈரான்-ஈராக் போரின்போது, ஈரான் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் எண்ணெய் ஏற்றுதல் வசதிகளை குறிவைத்து தாக்கியது. சீன தயாரிப்பான Silkworm ஏவுகணைகள் மற்றும் அதிவேக படகுகள் மூலம் ஈரான் இங்கே தாக்கியது. இந்த நடவடிக்கைகள் ஜலசந்தியை முழுமையாக தடுக்கவில்லை, ஆனால் கப்பல் காப்பீட்டு பிரீமியங்களை கூர்மையாக அதிகரித்தது மற்றும் கடல் போக்குவரத்தை தாமதப்படுத்தியது. இதனால் கடுமையாக பொருளாதாரம் சரிந்தது.
2012 ஆம் ஆண்டில் அமெரிக்க காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை வெளியிட்ட அறிக்கையின்படி, ஈரான் ஜலசந்தியை ஒரே கட்டமாக இல்லை.. கொஞ்சம் கொஞ்சமாக இந்த பகுதியை மூட முயற்சிக்கலாம். ஈரான் குறைவான தாக்குதல்களுடன் தொடங்கி காலப்போக்கில் அதிக வன்முறைக்கு செல்லலாம் . இதன் மூலம் அங்கே போக்குவரத்தை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
ஈரான் பின்வரும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்த ஜலசந்தியை முடக்க முடியும்.
ஜலசந்தியில் நுழையும் கப்பல்களுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்று வெளிப்படையாகக் கூறாமல் கப்பல் போக்குவரத்துக்கு ஜலசந்தி மூடப்பட்டுள்ளதாக அறிவிப்பது. கப்பல்களை பயமுறுத்துவது.
ஜலசந்தியில் அல்லது பாரசீக வளைகுடாவின் பிற பகுதிகளில் செல்லும் கப்பல்கள் இடைமறிக்கப்பட்டு தடுத்து வைக்கப்படலாம் அல்லது தாக்கப்படலாம் என்று வெளிப்படையாக அறிவிப்பது. இதன் மூலம் கப்பல்களை பயமுறுத்துவது.
ஜலசந்தியில் அல்லது வளைகுடாவின் பிற பகுதிகளில் செல்லும் கப்பல்களை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்துவது.
ஜலசந்தி மற்றும் வளைகுடாவின் பிற பகுதிகளில் கடல் கண்ணிவெடிகளை பயன்படுத்துவது.