இஸ்ரேலின் ராணுவ உள்கட்டமைப்புகளைக் குறி வைத்து செஜ்ஜில் ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி), இதுவரை பயன்படுத்தவே பயன்படுத்தாத, மிக நீண்ட தொலைவில் இருக்கும் இலக்குகளை அழிக்கப் பயன்படுதம் செஜ்ஜில் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவுவதற்குத் தயாராகி வருகிறது.
ஈரான் தயாரித்த இந்த ஏவுகணை சுமார் 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்லது என்றும், அதிவேகமாக இலக்கை அடையும் என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலாக இருக்கும் என்றும், அதிவேகம் காரணமாக, இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்புகளால், செஜ்ஜில் ஏவுகணையைத் தடுக்க முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து ஈரான் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் செய்தியில், இஸ்ரேலுக்கு எதிராக , ‘ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பதிலடியை ஈரான் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பின் தலைமையகம், விமானப் படையின் ஏவுதளங்கள், புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகங்கள் என நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
இரண்டு நிலைகளைக் கொண்ட செஜ்ஜில் ஏவுகணையில், திட எரிபொருள் நிரப்பப்படுகிறது. தரையில் இருந்து தரையில் இருக்கும் இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் வகையில், ஈரானில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், இஸ்ரேலின் எந்த வொருப் பகுதியையும் குறிவைத்து ஈரானால் தாக்க முடியும். அது மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளையும் கூட ஈரானால் தாக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த ஏவுகணையானது 18 மீட்டர் உயரம் கொண்டது.
இது கிட்டத்தட்ட 700 கிலோ கிராம் எடையுடன் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கவல்லது.
இதே ஏவுகணையின் மற்றப் பிரிவுகள் அதிகபட்சம் 4,000 கிலோ மீட்டர் வரை சென்று தாக்கி அழிக்கும் என்றும் உறுதி செய்யப்படாதத் தகவல்கள் கூறுகின்றன.
அதாவது, திரவ எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகளைவிட, திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணைகளை இயக்க குறைந்த நேரமே ஆகும், அது மட்டுமல்லாமல், அதன் வேகம் உள்ளிட்ட அனைத்துத் திறனும் அதிகரித்துக் காணப்படும் என்கிறது தொழில்நுட்பத் தகவல்கள்.
இது எதிரிகளின் கண்டுபிடிப்புத் தொழில்நுட்பங்களில் சிக்காது என்றும், இஸ்ரேலில் உள்ள இரும்பு டோம் பாதுகாப்பு மையங்களையும் கூட எதிர்க்கும் வல்லமை பெற்றது என்றும், ஈரான் நாட்டின் தொழில்நுட்ப பாதுகாப்புத் திறனுக்கும், உள்நாட்டுச் சக்திக்கும் அடையாளமாக இந்த செஜ்ஜில் ஏவுகணை இருக்கிறது என்றால் அதன் தாக்கும் திறன் உலக நாடுகளுக்கே அச்சமூட்டுவதாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இஸ்ரேல் – ஈரான் சண்டையில், செஜ்ஜில் ஏவுகணையின் பயன்பாடு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஏன் சண்டை வந்தது?
ஈரான் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் ‘ஆப்பரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த வார இறுதியில் தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரான் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன. ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.
அதற்குப் பதிலடியாக, ‘ஆப்பரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவீவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தியது. இதில் பெரும்பாலானவை இஸ்ரேல் வான்பாதுகாப்பு ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்கப்பட்டாலும், சில ஏவுகணைகள் இலக்குகளைத் தாக்கின.
அதில் இருந்து இஸ்ரேலும், ஈரானும் பரஸ்பரம் தாக்குதல் நடத்திவருகின்றன. போர் ஏழாவது நாளை அடைந்திருக்கிறது.