அமெரிக்காவின் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், ‘அமெரிக்கா கட்சி’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினாா்.
அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்திரத்தை மீட்டளிப்பதே அமெரிக்கா கட்சியின் நோக்கம் எனவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் மேற்கொண்டாா் ‘டெஸ்லா’ நிறுவனரும், தொழிலதிபருமான எலான் மஸ்க். டிரம்ப்பின் தோ்தல் பிரசாரத்துக்கு தனிப்பட்ட முறையில் அதிக நிதி அளித்தவா்களில் எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தாா்.
அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான கமலா ஹாரீஸை டிரம்ப் வீழ்த்தினாா். தொடா்ந்து, கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டிரம்ப் 2-ஆவது முறை பொறுப்பேற்றாா்.
டிரம்ப் நிா்வாகத்தில், அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை புதிதாக உருவாக்கப்பட்டு, அதற்கு எலான் மஸ்க் முக்கிய ஆலோசகராக நியமிக்கப்பட்டாா். இவா்கள் இருவருக்கும் இடையேயான ஒற்றுமை, உலக அளவில் கவனம் ஈா்த்தது. அதேநேரம், டிரம்ப் நிா்வாகத்தின் சில சா்ச்சைக்குரிய சா்வதேச முடிவுகள் பல நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தின.
இதன்தொடா்ச்சியாக டிரம்ப் நிா்வாகத்தால் கொண்டு வரப்பட்ட அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா தொடா்பாக டிரம்ப்-எலான் மஸ்க் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அமெரிக்காவின் கடன்சுமையை இந்த மசோதா பன்மடங்கு அதிகரிக்கும் என்று எலான் மஸ்க் விமா்சித்தாா். இவ்விவகாரத்தில் டிரம்ப்-எலான் மஸ்க் ஆகிய இருவரும் பொதுவெளியில் நேரடியாகக் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு, தனது எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க் கடந்த மாதம் வாக்கெடுப்பை ஒன்றை நடத்தினாா். அப்போது 80 சதவீதத்துக்கும் அதிகமானோா் கட்சித் தொடங்க ஆதரவளித்தனா். ஆனால், டிரம்ப்புடன் சமரசமாக சென்று, அரசியல் கட்சித் தொடங்கும் முடிவை எலான் மஸ்க் கைவிட்டாா்.
அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ள இந்த மசோதா, அதிபா் டிரம்ப் கையொப்பமிட்டால் சட்டமாகும் நிலையில் உள்ளது. இச்சூழலில், டிரம்ப்-எலான் மஸ்க் மோதல் மேலும் தீவிரமடைந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க சுதந்திர தினத்தன்று, ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளுக்கு மாற்றாக அமெரிக்கா கட்சியை உருவாக்க வேண்டுமா? என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் மீண்டும் ஒரு வாக்கெடுப்பை நடத்தினா். சுமாா் 12.48 லட்சம் போ் பங்கேற்ற இந்த வாக்கெடுப்பில் 65.4 சதவீதத்தினா், ஆம் (கட்சித் தொடங்க வேண்டும்) என்று விருப்பம் தெரிவித்தனா். அதன்படி, புதிய கட்சி அறிவிப்பை எலான் மஸ்க் சனிக்கிழமை வெளியிட்டாா்.
கட்சி தொடக்கம் தொடா்பான எக்ஸ் பதிவில், ‘மூன்றில் 2 பங்கு மக்கள், ஒரு புதிய அரசியல் கட்சியை விரும்புகிறீா்கள். அது உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். நமது நாட்டை வீண்செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கும் விஷயத்தில், நாம் ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம்; ஜனநாயகத்தில் அல்ல. இன்று அமெரிக்கா கட்சி உங்கள் சுதந்திரத்தை உங்களுக்குத் திரும்பி அளிக்க உருவாக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
சாத்தியமாகுமா சவாலான முயற்சி?: அமெரிக்காவில் இரு கட்சி முறை நீண்ட காலமாக விமா்சிக்கப்பட்டு வந்தாலும், கடந்த நூற்றாண்டில் மூன்றாவது கட்சியை உருவாக்குவதற்கான முயற்சிகள் பெரிதாக வெற்றி அடைந்ததில்லை. எனவே, எலான் மஸ்கின் இந்தப் புதிய கட்சி, அமெரிக்க அரசியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும் என்று அரசியல் நோக்கா்கள் கூறுகின்றனா்.
அமெரிக்க தோ்தல் ஆணையத்தில் இதுவரை எலான் மஸ்க் கட்சி பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அடுத்தாண்டு நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற தோ்தலில் தனது கட்சி முக்கிய அரசியல் சக்தியாக மாறும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா்.
எலான் மஸ்கின் நிறுவனங்களுடனான பெரிய ஒப்பந்தங்களை அரசு மறுபரிசீலனை செய்யலாம் என்று அதிபா் டிரம்ப் இந்த வார தொடக்கத்தில் கூறியிருந்தாா். எலான் மஸ்க் முன்பு தலைமைத் தாங்கிய அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறையே, அவரை கவனித்துக் கொள்ளும் என்றும் டிரம்ப் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.